குற்றப்பத்திரிகைகளுக்கு 7 நாட்களுக்குள் ஒப்புதல்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...

குற்றப்பத்திரிகைகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் அல்லது குற்ற வழக்கு இயக்குனரக அதிகாரிகள் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைகளுக்கு 7 நாட்களுக்குள் ஒப்புதல்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...
மதுரை மாவட்டம் சிந்துபட்டியை சேர்ந்த  ரகுவரன் என்பவரை கஞ்சா வழக்கில் சிந்துபட்டி போலீஸார் கைது செய்தனர். பின்னர் ரகுவரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை ரத்து செய்து, ரகுவரனை விடுதலை செய்யக்கோரி மச்சக்காளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு, "வணிக நோக்கத்திற்காக 60 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மனுதாரர் மகனும், அவருடன் கைது செய்யப்பட்டவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் 180 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். முடியாத நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
 
இந்த வழக்கில் 180 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. கால அவகாசம் கேட்டு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இருவரும் தாக்கல் செய்த பதிலில் காவல் ஆய்வாளர், சிறப்பு அரசு வழக்கறிஞர் மீதும், சிறப்பு அரசு வழக்கறிஞர், காவல் ஆய்வாளர் மீதும் குறைகூறியுள்ளனர். காவல் ஆய்வாளரும், அரசு சிறப்பு வழக்கறிஞரும் பொறுப்புடன் செயல்படாததால் குற்றவாளிகள் இருவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
ஒவ்வொரு நிலையிலும் அரசு ஊழியர்களின் பொறுப்புகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என அனைத்துறை துறை செயலர்களுக்கும் 2010-ல் தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி எதிர்காலத்தில் குற்றவாளிகள் ஜாமீனில் விடுதலையாவதை தடுக்க அரசு ஊழியர்களின் பொறுப்புகளை நிர்ணயம் செய்ய வேண்டும்.
 
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இருப்பினும் அரசு வழக்கறிஞரிம் ஒப்புதல் பெற வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நினைக்கின்றனர். குற்ற வழக்குகள் இயக்குனரகத்தின் பிற அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெறலாம். அதற்கு விசாரணை அதிகாரிகள் முயற்சிப்பது இல்லை.
 
இதனால் குற்றப்பத்திரிகைகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் அல்லது குற்ற வழக்கு இயக்குனரக அதிகாரிகள் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும். அதேபோல் குற்றப்பத்திரிகை பெற்றுக்கொண்டதற்கு ஒப்புகை கடிதம் வழங்க வேண்டும். நினைவூட்டலை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்.
 
இது தொடர்பாக சென்னை  குற்ற வழக்கு இயக்குனர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குண்டர் சட்ட கைதை மறுபரிசீலனை செய்யக்கோரி அரசுக்கு அனுப்பப்படும் மனுக்களை தாமதமாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்தாவது அதிகமாக உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப காரணங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.
குண்டர் சட்ட மனுக்கள் மீது தாமதம் இல்லாமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு பல வழக்குகளில் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும்  தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக, வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதமாக முடிவெடுக்கின்றனர்.
பொதுவாக அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
 
இதனால் குண்டர் சட்ட கைது தொடர்பான ஆவணங்கள் அரசிடம் இருக்கும். இதனால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட கைதி மனு அனுப்பும் போது அதில் ஏதாவது விபரம் கேட்க வேண்டும் என்றால் பேக்ஸ், இ-மெயில், வாட்ஸ்அப்பில் உடனடியாக கேட்டு பெற வேண்டும். குண்டர் சட்ட கைதிகளின் மனுக்களுக்காக தனி போர்டல் ஒன்றை உருவாக்கி அரசு கண்காணிக்க வேண்டும்.
 
இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அரசு விடுமுறைகளை கழித்து 25 நாள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. இதனால் மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது. வேறு வழக்கு இல்லாத நிலையில் மனுதாரரின் மகனை விடுதலை செய்ய வேண்டும்"
என உத்தரவிட்டுள்ளனர்.