"மசோதாவிற்கு ஒத்துழைக்க வேண்டும்"- வானதி சீனிவாசன்... "நாரி சக்தி கேலிக்கூத்து" - ப.சிதம்பரம்!!!

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதனை நாரி சக்தி கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை முன்னிட்டு  பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான  வானதி சீனிவாசன்  கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது அவர் பேசுகையில், "கூட்டத்தொடரின் முதல் நாளில் மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெறுவதற்கு நீண்ட நாட்களாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் "பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயம் பெண்களை உள்ளடக்கியதாக முழுமையானதாக மாற ஒவ்வொரு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு அவசியம். பெண்களின் நலனை முன்னிறுத்தி தான் பெரும்பாலான திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு இருக்கிறது. குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பல்வேறு பலன்களை அடைய நடவடிக்கை எடுத்தவர் மோடி" எனப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

மேலும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்து ஒரு மனதாக இந்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார், வானதி ஸ்ரீனிவாசன்

இந்நிலையில், ப. சிதம்பரம் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து, தனது X தள பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, "பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பா.ஜ.க.வின் ஏமாற்று அரசியலுக்கான எடுத்துக்காட்டு. இந்த மசோதாவை, நாரி சக்தி கேலிக்கூத்து மசோதா என்று தான் அழைக்க வேண்டும். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்கும்படி இந்திய பெண்களை அந்த மசோதா ஏளனம் செய்கிறது" என விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com