
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில், சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அதிமுக அலுவலகம் சீல்:
கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதை அடுத்து, சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
ஆவணங்கள் திருட்டு:
அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெள்ளி பரிசுப் பொருட்களை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றதாக ஈபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் அடிப்படியில் அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஆவணங்கள் மீட்பு:
ஈபிஎஸ் ஆதரவாளர் சி.வி.சண்முகம், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்னமூர்த்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில் அதிமுக அலுவலகம் தொடர்பாக 113 ஆவணங்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
சீரமைப்பு பணிகள்:
அதிமுக அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட கதவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், சில கதவுகளின் சாவிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஓ.பி.எஸ். தரப்பினர் எடுத்துச் சென்ற கணினிகளுக்கு மாற்றாக புதிய கணினிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆய்வு:
இந்த நிலையில், சீரமைப்பு பணிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.