காலை உணவுத் திட்டத்தால் அதிகரித்த வருகைப் பதிவேடு...!!!

காலை உணவுத் திட்டத்தால் அதிகரித்த வருகைப் பதிவேடு...!!!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர் வருகை உயர்ந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நடப்பு கல்வியாண்டின் (2022-2023) தொடக்கத்தில் அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதற்கட்டமாக 1,543 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், 1,319 பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் தினசரி வருகை 40% அளவுக்கு அதிகரித்திருப்பதாக மாநில திட்டக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ள திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 100% மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் திட்டம் அமலில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 98.5%, கரூரில் 97.4%, நீலகிரியில் 96.8% என்ற அளவுக்கு மாணவர்களின் வருகை பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 1,086 பள்ளிகளில் 20% அளவுக்கும், 22 பள்ளிகளில் 40% அளவுக்கு கடந்த 2022-ம் ஆண்டின் ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் வருகை அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காலை உணவுத் திட்டத்தால் தினந்தோறும் சராசரியாக 1. 48 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும், பள்ளிகளில் வருகைப் பதிவேடு அதிகரித்துள்ளதாகவும் மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தாக்கல் செய்த அறிக்கையில் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க:  இன்ஸ்டா காதலியிடம் ரூ.1.30 லட்சம் மோசடி... காதலன் கைது!!