கோயில் நிலத்தில் அமைகிறது கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்...? சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை...!

கோயில் நிலத்தில் அமைகிறது கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்...? சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை...!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை காலவரம்பு இல்லாமல் குத்தகைக்கு விடப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மாதம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்க இருப்பதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை, மறுநிர்ணயம் செய்யப்படும் என்றும் வழங்கப்பட்ட நோக்கத்திற்கு அல்லாமல் வேறு நோக்கத்திற்காக நிலத்தை பயன்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள் பட்டியிலிடப்படாததால் அனைத்து வழக்குகளையும் சேர்த்து பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை  இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிக்க : ‘‘ஒரு ஆணின் வெற்றிக்கு பெண்....” கட்டா குஸ்தி வெற்றி விழாவில் பேசிய ஹீரோ...!