உலக நாடுகள் பங்குபேறும் தமிழர் சங்கமம்.. சிறு-குறு தொழில் முனைவோருக்கு நற்செய்தி..!

உலக நாடுகள் பங்குபேறும் தமிழர் சங்கமம்.. சிறு-குறு தொழில் முனைவோருக்கு நற்செய்தி..!

தி ரைஸ் மாநாடு

சென்னையில் வருகின்ற ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் 21 நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் பங்கேற்கும் 10 ஆவது உலக தமிழர் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் சங்கமம் என்ற பெயரில் 10வது உலக தமிழர் தொழில் அதிபர்கள் மாநாடு நடக்கவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 9 உலக மாநாடுகளை தி ரைஸ் அமைப்பு நடத்தியுள்ளது. 

அந்த வகையில் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் தொழில் அதிபர்கள் பங்கேற்கும் 10 ஆவது உலக தமிழர் தொழில் அதிபர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. உலக அளவில் பல்வேறு தொழில்களில் வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்பு மிக்க பரிவர்த்தனைகள் நடைபெற உள்ளது. அனைத்துலக தமிழ் பெண்கள் தொழில் முனைவோர் அமைப்பினை மாநாட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பொங்கல் விழா

அதனை தொடர்ந்து ஜனவரி 8 ,9 ,10 ஆகிய 3 நாட்கள் நந்தனம் YMCA மைதானத்தில் தமிழர் பாரம்பரியம் சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதில் 8ஆம் தேதி 500 பொங்கல் பானைகள் கொண்டு அனைத்துலக தமிழர் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற இருக்கிறது. ஜல்லிக்கட்டு காளைகள் காட்சி படுத்தப்பட உள்ளது. இயற்கை வேளாண் சார்ந்த பொருட்களை  வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பொங்கல் வைக்கப்பட உள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

மாநாடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெகத் கஸ்பர் கூறுகையில், 10வது உலகத் தமிழ் தொழிலதிபர் மாநாட்டில் பெண்களுக்கான அமைப்பு சார்ந்த அனைத்துலக மகளிர் தொழிலமைப்புக்கான தொழில் முனைவோர் சார்ந்த பணிகளையும் தொடங்க உள்ளோம். 12வது மாநாடு ஜி7 தலைவர்கள் மாநாடு நடத்தும் அரங்கில் 12 வது ரைஸ் எழுமின் மாநாடு ஸ்விட்சர்லாந்தில் அந்நாட்டு அதிபர் தொடங்கி வைக்க நடைபெற உள்ளது.

நட்பு நடை விழா

ஜனவரி 8 பொங்கல் விழா, நட்பு நடை விழா YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் சார்ந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி அந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். தமிழர் உணவுத் திருவிழா, கலைப் பண்பாட்டு நிகழ்வு, தமிழர் பொங்கல் விழா "தமிழர் சங்கமத்தில்" நடைபெறவுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முக்கிய நோக்கம்

சிறு, குறு தொழிலுக்கு வாய்ப்பளிக்க கூடிய தொழில் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான தொழில் வணிக வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான திறன் கற்பித்தலைப் பற்றிய நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. கூட்டு மூலதனம் என்ற கருத்தியலை வலுப்படுத்தி தொழில் முனைவோருக்கு அதன் மூலமாக திறனை மேம்படுத்துவதற்காக வாய்ப்புகளை கலந்துரையாடி மேம்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கமாக இருக்கும்.

மேலும் படிக்க | உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!

உலகளவில் பொங்கல் விழா

தைப் பொங்கலை வரும் ஆண்டுகளில் தமிழரின் பெருமையை போற்றும் வகையில் உலக அளவில் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம். சிலம்பம், களரி, அடிமுறைகளை மீட்டெடுத்தலை மையமாகக் கொண்டு அது சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்த தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.