தரமற்ற பால் விற்கப்படுவதாக பேசிய முன்னாள் அமைச்சரின் வழக்கு...! சென்னை உயர்நீதிமன்றத்தின் நடந்த விசாரணை...!

தரமற்ற பால் விற்கப்படுவதாக பேசிய முன்னாள் அமைச்சரின் வழக்கு...! சென்னை உயர்நீதிமன்றத்தின் நடந்த விசாரணை...!

தனியார் பால் நிறுவனங்களின் பால்  தரம் குறைந்து உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார். 

தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும்  ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேச ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். இதன்பின்னர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜியுடான பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருப்பதாக பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புக்கும் இடையே சமசரம் ஏற்பட்டுவிட்டதால் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பால் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : கத்திமுனையில் வழிப்பறி - அதிமுக பிரமுகர் உட்பட இருவர் கைது...