”தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை ” ஆளுநரின் பேச்சு சர்ச்சைக்கா ? சமரசத்துக்கா?

புத்தக வெளியீட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி
1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guild of service (central) என்ற சமூக சேவை நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 100 ஆண்டுகள் தன்னம்பிக்கையும் வளர்ச்சியையும் பரப்பும் GOS என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி வெளியிட
முதல் பிரதியை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
மேலும் படிக்க | மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே - வாழ்த்தோடு இபிஎஸ்க்கு வகுப்பெடுத்த திருமா!
பின்னர் மேடையில் ஆளுநர் ரவி பேசிய போது:
- சமூகத்திற்கு சேவை செய்வது நம் கலாச்சாரத்திலேயே இருக்கிறது. நாம் நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை நம் மூதாதையர்கள் கற்றுத் தந்துள்ளனர். அந்த பண்பு நம் DNA விலேயே உள்ளது. இந்த நாகரீக சமூகக் குடும்பத்தைதான் நாம் பாரத் என்று அழைக்கிறோம்.
- 2047 ல் நம்முடைய 100 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் உலகத்திற்கே நற்குணங்களில் தலைசிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ வேண்டும். இந்தியா உலகிலேயே தலைசிறந்து விளங்கும் போது உலகமே அதை மிகவும் சவுகரியமாக உணரும்.
- நாம் தான் அதற்கு சான்று. ஐரோப்பிய நாடுகள் உலகிலேயே வலிமையாக இருந்த போது அது காலனியாதிக்கத்திற்கு தான் வழிவகுத்தது. மிகப் பெரிய அளவில் சுரண்டல்கள் நடந்தன. நாமே நமக்கு சான்று.
- அமெரிக்காவும் சோவித் ரஷ்யாவும் வலிமையான போது, இரு நாடுகளும் தங்கள் கொள்கைகளால் வேறுபட்டு, எண்ணற்ற மக்களுக்கு வெறும் துயரத்தை மட்டுமே கொடுக்கின்றன. இதில் ஒன்று ஜனநாயகத்தின் பெயராலும், இன்னொன்று பொதுவுடைமை சிந்தாந்தத்தின் பெயராலும் நடக்கிறது.
- சீனா சமீப காலமாக வலிமையடைவது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை நாம் கண்கூடாக நம் அருகிலிருக்கும் இலங்கை மூலமே பார்த்து வருகிறோம். நான் பாகிஸ்தான் பற்றி பேசவில்லை.
- இந்தியா உலக அரங்கில் வலிமை அடையும் போது இவ்வாறெல்லாம் நடக்காது. வசுதேவ குடும்பம் என்று இந்தியா கூறியதை உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.
- இந்த கொரோனாவின் போது என்ன நடந்தது என்று எண்ணிப் பாருங்கள். உலகமே செய்வதறியாது திகைத்த போது நம் நாடு தடுப்பூசிகளை உருவாக்கியது. பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளின் விலை ஏற்றிக் கொண்டிருந்த போது, நாம் சுமார் 150 நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து கொண்டிருந்தோம். நம்முடைய தேவைகளே பூர்த்தி செய்ய முடியாமல் திணறிய போதும் நாம் அதை செய்தோம். இது தான் இந்தியா.
இந்தியா தங்கள் குரலாக எதிரொளிக்கும்
உலகில் 3 ல் 2 பங்கு நாடுகள் குரலற்றவையாக இருக்கின்றன. அவை இந்தியா தங்கள் குரலாக எதிரொலிக்கும் என்று நம்புகின்றன. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அனைத்து நாடுகளையும் உற்றுநோக்க வைக்கிறது. இந்தியா தான் உலகின் நம்பிக்கை நாம் இந்த நாட்டை பிளவுபடுத்தி, துண்டுகளாக, இடங்களாக பார்க்கவில்லை. ஒரு குடும்பமாக பார்க்கிறோம்.
மேலும் படிக்க | ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை அடைத்து வைக்க கொட்டகை - மனுதாக்கல் செய்த சுயட்சை
காலனியாதிக்கவாதிகள் தான் நம் நாட்டை பிரித்தார்கள்
காலனியாதிக்கவாதிகள் தான் நம் நாட்டை பிரித்தார்கள். 1951 ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது. பழங்குடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புது புது அடையாளங்களுடன் வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. சமூகம் பிரிக்கப்படுகிறது. நாம் அடுத்தவர்களின் கண்களாக செயல்படும் போது தான் இத்தகைய பிரிவுகள் உருவாகின்றன.
ஆனால் நாம் நம்முடைய கண்களால் பார்த்தோமானால் ஒரு குடும்பமாகத் தான் இருக்கிறோம். இருக்க வேண்டும். இங்கே ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. இங்கே இருக்கும் பிரச்சனைகளை ஒரு குடும்பத்தின் பிரச்சனையாகத் தான் கருதி தீர்க்க வேண்டுமே தவிர. பிரிக்கக் கூடாது.
இந்தியாவில் 1.25 லட்சம் பேருக்கும், தமிழ்நாட்டில் 40,000 பேருக்கும் தொழுநோய் இருக்கிறது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் கூட தொட்டு சிகிச்சையளிக்க மறுப்பதை நான் பார்த்திருக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாகிய தொழுநோயாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு நாம் உதவ வேண்டும் என்றார்.