இன்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சர்கள் கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நல்ல செய்தியாக, EPFO ஊதிய உச்ச வரம்பு ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு முன்னர், அடிப்படை ஊதியம் மாதம் ரூ.15,000 பெறும் தொழிலாளர்கள் கட்டாயமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)-யில் சேர்க்கப்பட்டனர்.
இப்போது இது ரூ.25,000 ஆக உயர்ந்திருப்பதால், நாடு முழுவதும் 51 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கட்டாய EPFO வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம். இது தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தும் எனப் பெருமிதம் தெரிவித்துள்ளது.
EPFO ஊதிய வரம்பு 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகாலத்துக்கு மாற்றமின்றி இருந்தது.
ஆனால், இது கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டது. அதாவது, ரூ.15,000 சம்பளம் வாங்குபவர்கள் EPFO வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு, PF கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு நிறுவனத்தைப் பொறுத்து ஆப்ஷனாகவே இருந்தது.
தற்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசு மீண்டும் உச்ச வரம்பை மாற்றியமைத்துள்ளது. இப்போது ஊதிய உயர்வு மற்றும் முறைசார் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே புதிதாக EPFO ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்போது புதிய உச்ச வரம்பு மூலம் EPFO வரம்புக்குள் கொண்டுவரப்படும் தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் (EPS) (தகுதி உள்ளவர்களுக்கு), EDLI காப்பீட்டுத் தொகை, அவசரத் தேவைக்கு PF முன்பணம் ஆகியவை கிடைக்கும்.
பொதுவாக, PF-க்காக ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் அடிப்படையில் 12% ஊழியர் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது. நிறுவனமும் அதற்கு இணையான 12% பங்களிப்பை வழங்குகிறது. இதில் நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி (தகுதி இருந்தால்) EPS ஓய்வூதியத் திட்டத்திற்கும், மீதமுள்ள தொகை EPF-க்கும் செல்கிறது. அந்தப் பணத்துக்கு 8.25% (2025-26 நிதியாண்டில்) வட்டியும் கிடைக்கும்.
PF, EPS ஓய்வூதியம், EDLI காப்பீடு ஆகியவை மூன்று தனித்திட்டங்கள். எல்லாப் பலன்களும் அனைவருக்கும் ஒரே விதமாகக் கிடைக்காது. உறுப்பினர் தகுதி மற்றும் திட்ட விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும்.
சமீபத்திய EPFO தரவுகளின்படி, சுமார் 7.68 லட்சம் நிறுவனங்களில் சுமார் 7.98 கோடி உறுப்பினர்கள் PF உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன், EPS திட்டப்படி, சுமார் 82 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற்று வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.