உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா? 'மூளைச் சாவு' விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி - இனி புதிய சோதனைகள் வருமா?

மாநில அரசுகள் இதற்கெனத் தனிக் குழுக்களை அமைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது...
brain death
brain death
Published on
Updated on
2 min read

மருத்துவ உலகில் 'மூளைச் சாவு' (Brain Death) என்பது ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதைத் தீர்மானிக்கும் மிக மெல்லிய கோடு போன்ற விஷயமாகும். இந்த மூளைச் சாவு உறுதி செய்யப்படும் முறைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து விரிவான ஆய்வு செய்ய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலரான எஸ்.கணபதி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மருத்துவ நடைமுறைகள் போதுமானதாக இல்லை என்றும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பல நேரங்களில் அவசரகதியில் மூளைச் சாவு உறுதி செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சாதாரணமாக ஒரு மனிதனின் மூளை மற்றும் மூளைத் தண்டு (Brain Stem) ஆகியவற்றின் செயல்பாடுகள் நிரந்தரமாக நின்று போவதையே மூளைச் சாவு என்கிறோம். இதயம் துடித்துக் கொண்டிருந்தாலும், வென்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சுவாசம் நடந்தாலும், மூளை முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டால் அந்த நபரால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது. இது போன்ற நோயாளிகள் பெரும்பாலும் சாலை விபத்துக்கள் அல்லது மூளையில் பலத்த காயமடைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மருத்துவ ரீதியாக இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

இவர்களது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், மூளைச் சாவை முறையாக உறுதி செய்வது மிக அவசியமாகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு நோயாளிக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும். இதில் ஒரு நியூரோலஜிஸ்ட் (Neurologist) அல்லது நியூரோ சர்ஜன் (Neurosurgeon) கண்டிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் 'அப்னியா டெஸ்ட்' (Apnea Test) உள்ளிட்ட சில பரிசோதனைகளை 6 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை செய்து பார்த்து, அதன் பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், இந்த 'அப்னியா டெஸ்ட்' என்பது ஒரு நோயாளியின் சுவாசத்தை ஒரு குறிப்பிட்ட நேரம் நிறுத்திப் பார்த்துச் செய்யப்படும் சோதனையாகும். இது போதுமானதாக இல்லை என்றும், இதில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் வாதிட்டுள்ளார். மனுதாரர் கணபதியின் கருத்துப்படி, ஒரு நபர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதி செய்ய 'மூளை ஆஞ்சியோகிராம்' (Brain Angiogram) மற்றும் 'இ.இ.ஜி' (EEG) போன்ற நவீன சோதனைகளைக் கட்டாயமாக்க வேண்டும்.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் முழுமையாக நின்றுவிட்டதா என்பதை ஆஞ்சியோகிராம் மூலமும், மூளையில் மின் அலைகள் ஏதேனும் உள்ளதா என்பதை இ.இ.ஜி மூலமும் துல்லியமாகக் கண்டறிய முடியும். தற்போதுள்ள நடைமுறையில் மருத்துவர்கள் பல நேரங்களில் நோயாளியை நேரில் பார்க்காமலேயே, ரகசியக் கேமரா மூலம் வீடியோ எடுக்காமலேயே சான்றிதழில் கையெழுத்திடுவதாக அவர் பகீர் புகாரைத் தெரிவித்துள்ளார். சில மருத்துவமனைகள் சிகிச்சைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி, உறுப்பு தானத்திற்கு வற்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. 1994-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உறுப்பு மாற்றுச் சட்டம் மற்றும் 2011-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகளின்படி முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே இருப்பதாகவும், மாநில அரசுகள் இதற்கெனத் தனிக் குழுக்களை அமைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, நடைமுறைகள் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவை அறிவியல் ரீதியாக எவ்வளவு வலிமையானவை மற்றும் அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதுதான் கேள்வி என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் நியூரோலஜி துறைத் தலைவர் தலைமையில் 3 முதல் 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவானது, மூளைச் சாவை உறுதி செய்ய ஆஞ்சியோகிராம் மற்றும் இ.இ.ஜி சோதனைகள் அவசியமா, அவை பாதுகாப்பானவையா மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வசதிகளைச் செய்ய முடியுமா என்பது குறித்து விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்.

சிறிய மருத்துவமனைகளில் இந்த வசதிகள் இல்லை என்றால், அங்கே மூளைச் சாவு உறுதி செய்யப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இது குறித்து நிபுணர்களின் கருத்து மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் மற்றும் பக்கவாதம் காரணமாக சுமார் 2 லட்சம் பேர் மூளைச் சாவு அடைகிறார்கள். ஆனால், அதில் வெறும் 1,100 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்கிறார்கள். உறுப்பு தானம் என்பது ஒரு உன்னதமான விஷயம் என்றாலும், அது ஒருவரின் உயிரைப் பறித்துச் செய்யப்படக் கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. மூளைச் சாவு உறுதி செய்யப்படும் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்வதன் மூலமே பொதுமக்களுக்கு மருத்துவத் துறையின் மீது நம்பிக்கை ஏற்படும். எய்ம்ஸ் குழுவின் அறிக்கை வந்த பிறகு, ஜூலை மாதம் இந்த வழக்கில் அடுத்தகட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com