"அவங்களுக்கு தான் வராதுல.. அப்புறம் எதுக்கு அப்படி பவுல் பண்ண சொன்னீங்க?" - சிஎஸ்கேவை வெளுத்த ஆர்சிபி.. கொட்டித் தீர்த்த அஷ்வின்

அளவுக்கு கடந்த சீசன் தனக்கு ஏமாற்றமாக அமைந்ததாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்...
ashwin
ashwin
Published on
Updated on
2 min read

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் வரிசையாகத் தோல்வியடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. இந்த இக்கட்டான சூழலில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு முடிவு குறித்தும், கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும் தனது யூடியூப் சேனலில் மனம் திறந்து பேசியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சிஎஸ்கே அணியில் ஒரு வலுவான பிளேயிங் லெவனை அமைப்பதே நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது. பெங்களூரு அணி சிஎஸ்கே-வை துவம்சம் செய்ததைப் பார்த்த அஸ்வின், "சோகமான பாடல்கள் எதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று வேடிக்கையாகக் கேட்டு தனது பேச்சைத் தொடங்கினார். தான் இந்த ஆண்டு கூட சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கலாம், ஆனால் மனரீதியாகத் தான் மிகவும் சோர்ந்து போயிருந்ததாகவும், அந்த அளவுக்கு கடந்த சீசன் தனக்கு ஏமாற்றமாக அமைந்ததாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் என்ன நடந்தது என்பது குறித்துப் பேசும்படி கேட்டபோது, "அதைப் பற்றிப் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை, அது மனரீதியாக மிகவும் தொந்தரவு தரக்கூடிய விஷயம்" என்று அஸ்வின் கூறினார். அது தனக்கு மிகவும் வலிமிகுந்த அனுபவம் என்றும், சென்னையில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி அங்கேயே முடிப்பது நல்லது என்று கருதித் தான் ஓய்வு பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தன்னை அணியில் தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற குழப்பத்தை நிர்வாகத்திற்குத் தர விரும்பவில்லை என்றும், தான் விலகினால் அணிக்கு 10 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

அஸ்வின் மேலும் கூறுகையில், நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மீது தனக்குச் சிறிய நம்பிக்கை இருந்ததாகவும், ஆனால் பெங்களூரு அணி விளையாடிய விதம் மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சீசனில் அனுபவம் வாய்ந்த வீரர்களை விடுத்து இளைஞர்களை நம்பி சிஎஸ்கே களம் இறங்கியுள்ளது. ஆனால், அந்த இளம் வீரர்களைச் சரியாகக் கையாளும் விதம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, பந்துவீச்சாளர்களின் பலம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைச் செயல்பட வைப்பது தவறு என்று அவர் சாடினார். அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் போன்ற பந்துவீச்சாளர்களை அவர்களுக்கு வராத 'வைட் யார்க்கர்' வீசச் சொல்வது தவறான வியூகம் என்று அவர் விமர்சித்தார். டிம் டேவிட் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும்போது, பந்துவீச்சாளர்களின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையில் பந்துவீசச் சொன்னது சிஎஸ்கே-வின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அஸ்வின் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com