ஆசியக் கோப்பை பரபரப்பு: ஹாரிஸ் ராஃபின் அபராதத்தை நானே செலுத்துகிறேன்! - பிசிபி தலைவர் மோசின் நக்வியின் அதிரடி முடிவு

பிசிபி தலைவரின் இந்த ஆதரவு, கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
mohsin naqvi pay penalty
mohsin naqvi pay penalty
Published on
Updated on
1 min read

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டத்தின் போது, தனது ஆவேசமான நடவடிக்கைகளால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மோசின் நக்வியே தனிப்பட்ட முறையில் செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான தூண்டுதல் மற்றும் விளையாட்டு உணர்வுக்கு முரணான நடவடிக்கைக்காக ஐசிசி (ICC) அபராதம் விதித்திருக்கும் நிலையில், பிசிபி தலைவரின் இந்த ஆதரவு, கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

செப்டம்பர் 21 அன்று துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம், எப்போதும் போலவே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால், ஆட்டத்தின் முடிவில் மைதானத்தில் நடந்த சில சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) அதிகாரபூர்வமான புகாரின் அடிப்படையிலேயே ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, ஹாரிஸ் ராஃப் இரண்டு காரணங்களுக்காகத் தண்டிக்கப்பட்டார்:

ஆட்டத்தின் போது, இந்திய வீரர்கள் (சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ஆகியோர்) மற்றும் ரசிகர்கள் மீது அவர் பயன்படுத்திய 'அவதூறு மொழி' காரணமாக, அவரது போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்கள் “கோலி, கோலி” என்று கோஷமிட்டபோது, எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற ராஃப், பதிலுக்கு ஆத்திரமூட்டும் சைகைகளைச் செய்தார். இது, இந்திய இராணுவ நடவடிக்கைகளைத் தாக்கும் வகையில், விமானம் வீழ்வது போலவும், '6-0' என்ற எண்ணைக் காட்டியதாகவும் பார்க்கப்பட்டது. இந்தச் சைகை விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று ஐசிசி சுட்டிக்காட்டியது.

ஒரு வீரர் மீது ஐசிசி விதிக்கும் அபராதத்தை, கிரிக்கெட் வாரியத் தலைவர் தனிப்பட்ட முறையில் செலுத்துவது என்பது அரிதான நிகழ்வாகும். இது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ராஃபின் நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாகத் துணை நிற்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதேசமயம், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தியாவுடனான வெற்றிக்குப் பிறகு, "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும், இந்திய தியாகிகளுக்காகவும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம்" என்று பேசியிருந்தார். இது அரசியல் ரீதியிலான பேச்சு என்று பிசிபி குற்றம் சாட்டியது.

ஐசிசி நடத்திய விசாரணையில், சூர்யகுமார் யாதவ் மீதும் இதே 30% போட்டி ஊதிய அபராதம் விதிக்கப்பட்டதுடன், இனிமேல் அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்புகளில் அரசியல் ரீதியான கருத்துகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்.

விளையாட்டு வீரர்களின் சைகைகள் மற்றும் பேச்சுகளால் ஆசியக் கோப்பைப் போட்டியில் இரு நாடுகளும் பரஸ்பரம் அபராதங்களைப் பெற்றுள்ள நிலையில், நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டி, ஆக்ரோஷமான கிரிக்கெட்டுக்கான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com