ரோகித் ஷர்மாவின் பேட்டை வாங்கி.. உள்ளே அனுமதிக்காத நடுவர்கள்! மைதானத்திலேயே நடந்த வாக்குவாதம்! கடைசியில் நடந்தது என்ன?

பேட்டை வாங்கி அதன் அளவுகளைச் சோதனை செய்ததே அவரது எரிச்சலுக்குக் காரணமாக அமைந்தது...
rohit sharma
rohit sharma
Published on
Updated on
2 min read

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்.12) ஞாயிற்றுக்கிழமை நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா மிகுந்த கோபத்தில் காணப்பட்டார். மும்பை அணி 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தத் தொடங்குவதற்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்தது. அம்பயர் ரோகித் ஷர்மாவின் பேட்டை வாங்கி அதன் அளவுகளைச் சோதனை செய்ததே அவரது எரிச்சலுக்குக் காரணமாக அமைந்தது. தனது பேட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அதிகாரிகளிடம் ரோகித் வாதிட்டார். அப்போது அவருடன் திலக் வர்மாவும் இணைந்து அதிகாரிகளிடம் பேசினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பேட் சோதனையில் தேர்ச்சி பெற்றது. அப்பொழுது அதிகாரியைப் பார்த்த திலக் வர்மா, நீங்கள் அந்த அளக்கும் கருவியைத் தவறான பக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டியது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விதிகளுக்குப் புறம்பான அளவுகளில் பேட்டுகளைப் பயன்படுத்தி கூடுதல் பலன் பெறுவதைத் தடுக்க, 2025-ம் ஆண்டு முதல் திடீர் சோதனைகளை நடுவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பு வரை இந்தச் சோதனைகள் வீரர்களின் ஓய்வறைக்குள்ளேயே (Dressing Room) முடிந்துவிடும். ஆனால், தற்போது வீரர்கள் அதிரடியாகப் பந்துகளைப் பறக்க விடுவதால், பிசிசிஐ அதிகாரிகள் களத்திலேயே எந்த நேரத்திலும் வீரர்களின் பேட்டை வாங்கிச் சோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பேட்டின் அகலம் 4.25 அங்குலத்திற்கு மிகாமலும், அதன் தடிமன் 2.64 அங்குலத்திற்கு உள்ளேயும் இருக்க வேண்டும். அதேபோல் பேட்டின் ஓரம் (Edge) 1.56 அங்குலத்திற்குள் இருக்க வேண்டும் மற்றும் கைப்பிடி முதல் அடிப்பாகம் வரை மொத்த உயரம் 38 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. பில் சால்ட் 78 ரன்களும், ரஜத் படிதார் 53 ரன்களும் எடுத்து மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இவர்களுக்குத் துணையாக விராட் கோலி நிதானமாக ஆடி 50 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால், ஆர்சிபி அணி ஒரு இமாலய இலக்கை நிர்ணயித்தது.

கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. அதிரடியாக ஆடத் தொடங்கிய ரோகித் சர்மாவுக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த போது பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா 40 ரன்களும், ரயான் ரிக்கெல்டன் 37 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். கடைசி நேரத்தில் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 31 பந்துகளில் 71 ரன்கள் குவித்து மிரட்டினார். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த 18 ரன்கள் வித்தியாச வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் பருவத்தில் தனது மூன்றாவது தொடர் தோல்வியைச் சந்தித்து புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com