ammasi and kokila 
க்ரைம்

“கிணற்றில் மிதந்த மூட்டை.. 7 மாத கர்ப்பிணியின் சடலம்” - திருமணம் செய்வதாக ஆசை காட்டி கொலை.. மூன்று நாட்களில் நடந்தது என்ன?

பெண்ணின் வீட்டிற்கு சென்ற அம்மாசி “கோகிலா காணாமல் போய்விட்டதாக” தெரிவித்துள்ளார்

Muthu Lakshmi

எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் பாச்சாலியூர் அருகே திருமணம் ஆகாமலேயே ஏழு மாத கர்ப்பிணியான 23 வயது கோகிலா என்ற பெண் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கொங்கணாபுரம் போலீசார் கோகிலாவின் உடலை மீட்ட நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (23). கல்லூரி முடித்த கோகிலன் திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதால் பெற்றோர்கள் அவரை சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது கோகிலா 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரித்ததில் கர்ப்பத்திற்கு காரணமானவர் கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசி என்று தெரியவந்துள்ளது. அதையடுத்து சங்ககிரி மகளிர் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் “கர்ப்பத்திற்கு காரணம் நான் தான்” என்று ஒப்புக்கொண்ட அம்மாசி “கோகிலாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். அதையடுத்து காதலன் அம்மாசியுடன்  கோகிலாவையும் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அம்மாசி “கோகிலா காணாமல் போய்விட்டதாக” தெரிவித்துள்ளார். அதையடுத்து கோகிலாவின் தந்தை பேராக்கவுண்டர் “தனது மகள் கோகிலா காணவில்லை” என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனிடையே வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்றை எட்டி பார்த்துள்ளனர். அதில்  வெள்ளை நிற சாக்குமூட்டை ஒன்று கட்டிய நிலையில் மிதந்து உள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கொங்கணாபுரம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் எடப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் கோகிலவாக இருக்குமோ? என்று அவரது உறவினர்களை வரவழைத்து பார்த்தபோது, அந்த சடலம் திருமணமாகாமலேயே 7 மாத கர்ப்பிணியான பெண் கோகிலா என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  கோகிலாவின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதையடுத்து சந்தேகத்தின் பேரில் பெண்ணின் காதலன் அம்மாசியை பிடித்து போலீசார் விசாரித்ததில், திருமணம் தொடர்பான தகராறில் கோகிலாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அம்மாசியை கைது செய்த கொங்கணாபுரம் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 மாத கர்ப்பிணி பெண்ணை காதலனே கிலோய் செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.