க்ரைம்

பத்தாம் வகுப்பு மாணவியை காட்டுக்குள் இழுத்து சென்ற வாலிபர்.. 'காப்பாற்றுங்கள்' என அலறி துடித்த சிறுமி - புதுக்கோட்டையில் பரபரப்பு!

மாணவியின் வழியை மறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் வலுக்கட்டாயமாக அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள்...

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை வழிமறித்து வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 19 வயது இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி முடிந்த பிறகு வழக்கம்போல் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். கீழ ஏம்பல் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, மேல ஏந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது, மீமிசல் கோபலபட்டிணத்தைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவரது மகனான 19 வயதுடைய மகன் பைசல்கான் என்ற இளைஞர், மாணவியின் வழியை மறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் வலுக்கட்டாயமாக அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இளைஞர் பிடியிலிருந்து தப்பிக்க நீண்ட நேரம் போராடிய நிலையில் ஒரு கட்டத்தில் அவரது பிடியில் இருந்து தப்பிய மாணவி, "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..." என்று உரக்கக் கூச்சலிட்டபடி சாலையை நோக்கி ஓடியுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில் பொதுமக்கள் வருவதைக் கண்ட இளைஞர் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் நிலையில், ஆனால் அவரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி இது குறித்து தட்டிக் கேட்டுள்ளனர். பின்னர் அவரை மீமிசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீமிசல் போலீசார், மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவியை காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்றதற்கான காரணம் என்ன? இருவருக்கும் முன்பே அறிமுகம் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடன் இந்தச் செயலில் ஈடுபட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து தனியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.