சென்னை மாவட்டம், சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். பிரமிளாவின் கணவர் ராமசந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார் . மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது, இதனால் பிரமிளா தனது இரண்டாவது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரமிளாவின் மூன்றாவது மகனான 19 வயதுடைய முகில் கூலி வேலை செய்து வந்த நிலையில் போதைக்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வந்து தாய் பிரமிளாவிடம் சண்டை போடுவதுடன் அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த முகில் தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு தூங்க சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளான தாய் பிரமிளா தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடும் மகன் முகில் கூறியது போல் தன்னை கொலை செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகன் முகில் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு நேராக வடபழனி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
பின்னர் போலீசார் பிரமிளா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் பிரமிளாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த மகனை தாய் தூங்கும் போது கழுத்தை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.