சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் 53 வயதுடைய சர்வேஷ் (பெயர் மாற்றம்), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ஒரு தனியார் மொபைல் செயலி மூலம் சுதாகர் என்ற இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து மெசேஜ் செய்து பழகி வந்த நிலையில் சர்வேஷை ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கலாம் என சுதாகர் அழைத்திருக்கிறார். இதனை நம்பி நம்பி, கடந்த (ஜூலை 19) ஆம் தேதி மாலை சர்வேஷ் தி.நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற அவரை சுதாகர் நட்பாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மேலும் இரு இளைஞர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து, ராஜாவை கத்திமுனையில் மிரட்டி தாக்கியதுடன், அவரது செல்போன் மூலம் ஜி-பே வழியாக ரூ.15 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்துள்ளனர். அதன்பிறகும் விடாமல், ராஜாவை அருகிலிருந்த ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்று, அவரது வங்கி கணக்கிலிருந்து மேலும் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுக்கச் செய்துள்ளனர். பணத்தை பறித்த பிறகு, "இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவித்தால் உயிருடன் விடமாட்டோம்" என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சர்வேஷ், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜி-பே பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு தகவல்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், தி.நகரைச் சேர்ந்த சுதாகர் (20), அவரது நண்பர் சதீஷ் (20), அசோக் நகரைச் சேர்ந்த விக்னேஷ்வர் (27) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.21 ஆயிரம் ரொக்கம், ஒரு கத்தி மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சுதாகர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும், அவர் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததும், மற்ற இருவரும் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் தனியார் செயலிகள் மூலம் ஏற்படும் அறிமுகங்களை நம்பி தனியாகச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.