குர்கானில் தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை பதிவிட்டுவிட்டு 28 வயதான ஆடை வியாபாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை ஃபரிதாபாத்தின் பல்லப்கர் பகுதியில் உள்ள தனது கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவரான ராகுல், செக்டர் 3 ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர். காவல்துறையின் தகவல்படி, அவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயாரைச் சந்தித்த பிறகு, சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திறந்திருந்த ஆடைக்கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் கடைக்குள்தூக்கிட்டு தற்கொலை செய்து நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், காலை சுமார் 11 மணியளவில், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட வீடியோவைப் பார்த்த ராகுலின் சகோதரர் அமித், மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் கடைக்கு விரைந்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடை உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், கண்ணாடிக் கதவை உடைத்துத் திறந்தனர், ஆனால் ராகுல் அதற்குள் உயிரிழந்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பி.கே. சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது மரணத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காணொளியில், ராகுல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் அதன் பிறகு அவரது மனைவி, மாமியார் வீணா, மாமனார் பிட்டு மற்றும் நாத்தனார் நீது ஆகியோரால் தொடர்ச்சியான உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்களைக் கழுவுவது உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்தபோதிலும், தனது மனைவி தன்னை மீண்டும் மீண்டும் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தனது பெற்றோரிடமிருந்து தனியாக வாழ வேண்டும் என்று அவரது மனைவி வற்புறுத்தியதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மீது ஒரு பொய்யான தாக்குதல் வழக்குப் பதிவு செய்ததால், தான் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் ராகுல் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தனது இறுதிச் செய்தியில், ராகுல் தன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு, தனது சொத்துக்களை தன் தாய், உடன்பிறப்புகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்குச் சேர வேண்டும் என்றும் கூறியிருந்தார். ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகார் மற்றும் அந்த வீடியோவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில், செக்டர் 3 போலீசார் அவரது மனைவி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விசாரணை அதிகாரி அஜித் சிங், காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், வீடியோவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.