சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான ரோனிஷா சட்டி என்ற இளம் பெண், தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டுவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலை முயற்சிக்குக் காரணம், தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பிரசாந்த் சர்மா என்பவர்தான் என்றும், அவரும் அவரது குடும்பத்தினரும் தன்னைத் தொடர்ந்து டார்ச்சர் செய்து பொய் வதந்திகளைப் பரப்புவதாகவும் அந்த வீடியோவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அந்த இளம் பெண் ஜம்முவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ரோனிஷாவின் தாய் ரீனா சட்டி, தனது மகளின் வாழ்க்கையை பிரசாந்த் முழுமையாகச் சீரழித்துவிட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பிரசாந்த் தனது மகளுக்கு எதிராக ஒரு போலி (Fake) சோஷியல் மீடியா பக்கத்தை உருவாக்கி, அதில் மிகவும் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். அதுமட்டுமன்றி, தங்களின் குடும்பப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி, ஒட்டுமொத்தக் குடும்பத்தைப் பற்றியும் அசிங்கமான பொய்களைப் பரப்பியுள்ளார். இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தனது மகள் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
தங்களின் குடும்பப் பின்னணி குறித்துப் பேசிய அவர், தனது கணவர் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் என்றும், தையல் வேலை செய்து கஷ்டப்பட்டு, எஜுகேஷன் லோன் வாங்கித்தான் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்ததாகவும் கூறினார். தாங்கள் அப்படி என்ன பாவம் செய்தோம் என்று கதறிய அவர், பல வாரங்கள் ஆகியும் அந்தப் போலி சோஷியல் மீடியா அக்கவுண்ட்டின் முகவரியைக் கூடக் கண்டுபிடிக்காமல் போலீசார் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், பிரசாந்த் தனது மகளிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, இப்போது கல்யாணம் செய்ய முடியாது என்று ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரசாந்த் சர்மாவின் வக்கீல் முற்றிலும் மறுத்துள்ளார். பிரசாந்தின் தரப்பு வக்கீல் கூறுகையில், 2024 செப்டம்பர் மாதம் பிரசாந்திற்கு இந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது என்றும், நவம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் கூறினார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும், 6 மாதத்திற்குள் பிரசாந்தை கல்யாணம் செய்துகொள்வதாகவும் அவளது குடும்பத்தினர் நம்ப வைத்துள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் சொகுசு ஷாப்பிங் செய்வதற்காக 3 முதல் 4 முறை துபாய்க்குப் பயணம் செய்துள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதால், பிரசாந்தும் அவளது ஆசைகளை நிறைவேற்றத் தங்க நகைகள், ஷாப்பிங் மற்றும் கேஷ் என மொத்தம் 9.5 லட்சம் ரூபாய் வரை அவளுக்கு யுபிஐ (UPI) மூலமாகப் பணம் அனுப்பியுள்ளார்.
பிரசாந்த்தான் தொடர்ந்து கல்யாணத்திற்கு வற்புறுத்தி வந்தாரே தவிர, அந்தப் பெண் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் பிரசாந்தின் குடும்பத்தினர் வற்புறுத்திய போது, தங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதால் பிரசாந்தை கல்யாணம் செய்ய முடியாது என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரசாந்த், விவாகரத்து சான்றிதழைக் கேட்பதற்காகக் கோர்ட்டிற்குச் சென்றபோதுதான், அந்தப் பெண்ணிற்கு இன்னும் அவளது முதல் கணவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்தே கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் அந்த இன்ஸ்டா பெண் மற்றும் அவளது குடும்பத்தினர் மீது ஏமாற்று வேலை (Cheating) செய்ததாகப் போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்குப் போட்டியாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அந்தப் பெண்ணின் தற்கொலை முயற்சி குறித்துப் பேசிய வக்கீல், எதனால் அவர் இந்த முடிவை எடுத்தார் என்று தம்மால் கூற முடியாது என்றும், தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்றும் கூறினார். இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருப்பதால், அவளுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவள் சட்டப்படிதான் தீர்வு கண்டிருக்க வேண்டும் என்று பிரசாந்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்