கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள மரவாநத்தம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் 60 வயதுடைய ராஜேந்திரன். இவரது மனைவி 55 வயதுடைய வள்ளியம்மாள். வள்ளியம்மாள் வீட்டிற்கு அருகில் 70 வயதுடைய கண்ணியம்மாள் என்ற மூதாட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். வள்ளி மற்றும் கன்னியம்மாள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் கன்னியம்மாள் தினந்தோறும் மாலை வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு வள்ளி வீட்டிற்கு சென்று அவ்ருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது வள்ளியின் கணவர் ராஜேந்திரனுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருப்பதால் அவர் தொடர்ச்சியாக மாத்திரை உட்கொள்வது வழக்கம் அதனை கண்டு எப்போதும் கன்னியம்மாள் “உன்னால தான் வள்ளி எப்பவும் கஷ்டப்படுறா என வசை பாடுவது” வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை (ஜன 01) வழக்கம் போல் கன்னியம்மாள் ராஜேந்திரன் வீட்டிற்கு வள்ளியிடம் பேச வந்தபோது ராஜேந்திரன் மாத்திரை உட்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட கன்னியம்மாள் வழக்கம் போலவே “எப்போ பாத்தாலும் எதுக்கு இவ்வளவு மாத்திரை சாப்பிடுற இதெல்லாம் விட்டுட்டு செத்து தொலையேன்” எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் “எங்க வீட்டுக்கு வந்து என்னையா சாக சொல்ற” என தனக்கு அருகில் இருந்த விறகு அடுப்பு ஊத பயன்படுத்தப்படும் இரும்பு பைப்பை கொண்டு கன்னியம்மாளின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
தலையில் பலத்த காயம் அடைந்த கண்ணியம்மாள் ரத்த வெள்ளத்துடன் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கே கன்னியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு ராஜேந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.