Uthangarai POCSO Case Accused Arrested 
க்ரைம்

“ஆபாச வீடியோ காட்டி 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை” - ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த அசிங்கம்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

அடிக்கடி தெருவில் விளையாடும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது..

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில், மூன்று சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக 65 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளிடம் தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காட்டி தொந்தரவு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய சின்னராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பராமரிப்புத் துறையில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது.

எனவே ஓய்வு பெற்ற பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த சின்னராஜ், அடிக்கடி தெருவில் விளையாடும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த மூன்று சிறுமிகளை பேசி ஆளில்லாத இடத்திற்கு அழைத்து சென்ற சின்னராஜ் அவர்களுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்கள் காட்டியும், உடலில் கை வைத்தும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமிகள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் சின்னராஜ் தங்களிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாகவும், தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காட்டி தொந்தரவு செய்ததாகவும் மூன்று சிறுமிகளும் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சின்னராஜிடம் இதுகுறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்ட நிலையில், அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வருவதை அறிந்த சின்னராஜ் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சின்னராஜை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். மூன்று சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்