க்ரைம்

"உட்பக்கமாக பூட்டியிருந்த வீடு.." சிக்கிய 'இறுதி கடிதம்!' திருமணமான இரண்டே வருடத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு

ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது விக்னேஷ்வரி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

Vinvizhi Leninton

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன், கலா தம்பதியின் மகள் விக்னேஷ்வரி (27). அவருக்கும் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் அபிலாஷுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தாம்பத்தினருக்கு குழந்தைகள் கிடையாது. இதற்கிடையே நேற்று முன்தினம் விக்னேஷ்வரி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். மாலையில் அபிலாஷின் தந்தை சந்திரன் வீட்டுக்கு வந்தநிலையில் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. அவர் பலமுறை தட்டியும் திறக்கவில்லை. பதற்றமடைந்த அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது விக்னேஷ்வரி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இதனையடுத்து இந்த நிகழ்வு குறித்து விழிஞ்ஞம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கணவன், மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தற்கொலைக்கு என்ன காரணம்? என்று தெரிய வில்லை என்றும் அபிலாஷின் தந்தை சந்திரன் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் கணவன் வீட்டில் விக்னேஷ்வரி பல்வேறு கொடுமைகளை அனுபவித்ததாக விக்னேஸ்வரின் உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். மேலும் விக்னேஷ்வரியின் சகோதரர், தங்கையின் கணவர் குடும்பத்தினரால் தனது சகோதரிக்கு துன்புறுத்தல் இருந்து வந்தது என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் கணவர் அபிலாஷ் குடிபோதையில் தினமும் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் இதனால் மன அழுத்தத்தால் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து விக்னேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக அபிலாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் உள்ள அவரது உறவினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.