க்ரைம்

“Browsing Centre-க்கு செல்லும் பெண்களே உஷார்” - செல்போன் செயலி மூலம் அந்தரங்கத்தை கண்காணித்த ஊழியர்!

செல்போன் கேமரா மற்றும் திரை மூலம் மாணவியின் அன்றாட செயற்பாடுகளை மாணவிக்கு தெரியாமல்..

Mahalakshmi Somasundaram

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் Browsing Centre-க்கு மயிலாடுதுறை, நீடுர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது Browsing Centre-ல் வேலை பார்த்த 28 வயதுடைய முகமது அப்ரித் என்பவர் மாணவியிடம் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்கு அந்த மாணவியின் செல்போனில் “AirDroid Parental Control” என்ற Android செயலியை பதிவிறக்கும் செய்ய வேண்டும் என கூறி அவரது செல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

கல்லூரி மாணவியின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த AirDroid Parental Control என்ற செயலியில் உள்ள Screen Mirroring மற்றும் Camera Access போன்றவற்றை பயன்படுத்தி மேற்கண்ட முகமது அப்ரித் தனது செல்போனில் இருந்து அந்த மாணவியின் செல்போன் கேமரா மற்றும் திரை மூலம் மாணவியின் அன்றாட செயற்பாடுகளை மாணவிக்கு தெரியாமல் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து அவரது தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமாக அந்த மாணவியின் செல்போனில் பெறப்பட்ட Notification மற்றும் செல் போனில் விரைவாக ஜார்ஜ் குறைவது போன்றவற்றின் மூலம் கல்லூரி மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் காவல் துறையினர் கல்லூரி மாணவியின் செல்போனை கைப்பற்றி சோதனை செய்ததில் அவரது செல்போனில் AirDroid Parental Control செயலி பதிவிறக்கம் செய்து யாரோ சட்டவிரோதமாக மாணவியை கண்காணித்து வந்ததை கண்டறிந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் முகமது அப்ரித் போனை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்ட போது அவர் தான் குற்றவாளி என கண்டறிந்த போலீசார் முகமது அப்ரித்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் முகமது அப்ரித் கல்லூரி மாணவியின் செல்போனில் மட்டுமல்லாமல் கடைக்கு வந்த பல்வேறு பெண்களின் போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அவர்களை கண்காணித்து அவர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வந்துள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் தங்களுடைய செல்போனில் தேவையற்ற மற்றும் நம்பகத்துவம் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதால் தங்களது தனிப்பட்ட தரவுகள் சைபர் குற்றங்கள் மூலம் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.