நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயங்களுடன் 40 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்ததது யார்? கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என விசாரணை மேகொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் கிராம நிர்வாக அலுவலரான 40 வயதுடைய ராஜாராமன் என்பதும் இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு எட்டுக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது பட்டா மாற்றத்திற்காக வந்த அப்பகுதி மக்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த ராஜாராமன் நேற்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்று வந்த நிலையில் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் தலை, கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜாராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்திருக்கிறார்.
இருசக்கர வாகனத்தில் வந்த அவரை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் அவரிடம் இருந்த செல்போன்,பணம் திருட்டு போய் உள்ளது. எனவே இது பணத்திற்காக செய்யப்பட்ட கொலையா? அல்லது ஏதேனும் முன்பகை உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் தலையில் கல்லைப்போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.