புதுச்சேரி மாநிலம், ரெயின்போ நகர் 5 வது குறுக்கு தெருவில் நேற்று நள்ளிரவு வாலிபர்கள் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது, இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்காளல் தாக்கி உள்ளனர். இதில் ஒரு வாலிபரை மட்டும் ஒரு தரப்பினர் கற்களால் அடித்து, கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது சாரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது இரண்டாவது மகனான 23 வயதுடைய சந்தோஷ் என்பதும். இவர் மலேசியாவில் பேக்கிங் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக புதுச்சேரி வந்துள்ளார். இவரது நண்பர்கள் சிலர் டிவி நகரில் உள்ளதால் தனது நண்பர்களை பார்க்க செல்லும் சந்தோஷ் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தோஷ்க்கும் டிவி நகரை சேர்ந்த பெர்னா என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, இதில் சந்தோஷ் தரப்பினர் பெர்னாவின் மண்டையில் அடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பகை ஏற்பட்டு இவர்கள் அவ்வப்போது சண்டை இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெர்னா தரப்பினர் மதுபோதையில் சந்தோஷை போன் செய்து ரெயின்போ நகர் பகுதிக்கு வர கூறியுள்ளனர். இதையடுத்து மது போதையில் இருந்த சந்தோஷ் தனது நண்பர்களுடன் ரெயின்போ நகர் 7 வது குறுக்கு தெருவிற்க்கு சென்றுள்ளார்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் கற்களால் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில் சந்தோஷ் மட்டும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த நிலையில் பெர்னா தரப்பினர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து சந்தோஷை வெட்டி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பெரியகடை போலீசார், டிவி நகரை சேர்ந்த பெர்னா, அருண், விஸ்வா, நாகராஜ், ஹானஸ்ட் ராஜ், பெர்னோ சகோதரர் சந்தோஷ் மற்றும் லாஸ்பேட்டையை சேர்ந்த ரவுடி லீயோ, ஆகிய 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இவர்களுக்குள் காதல் விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினையா அல்லது மது, கஞ்சா போதை பிரச்சினையா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணை முடிந்த பிறகே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட சந்தோஷ் மீது உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.