father accused of sexual assault 
க்ரைம்

தந்தையால் தொடர் சீரழிப்பிற்கு ஆளான 16 வயது சிறுமி! 2 முறை கர்ப்பம்.. கருக்கலைப்பு - பிறந்த குழந்தையையும் விற்ற பகீர் சம்பவங்கள்

தனது 38 வயது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.

Vinvizhi Leninton

ராய்ப்பூரில், 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு முறை கர்ப்பமானதாகக் கூறப்படும் நிலையில், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, பிரசவத்திற்காக அந்தச் சிறுமியை வயது வந்த, திருமணமான பெண் என்று கூறி ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த சிறுமிக்குப் பிறந்த ஆண் குழந்தை, பிரசவத்திற்குப் பிறகு மற்றொரு நபருக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னரும் அந்தப் பெண் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, சிறுமியின் தந்தை, அத்தை மற்றும் ஒரு செவிலியர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, சிறுமியின் தாய் அவரது கணவரிடமிருந்து பிரிந்து, அவர்களது மூன்று மகள்களையும் தனது கணவரின் பராமரிப்பில் விட்டுச் சென்றுள்ளார். பின்னர் 2023-ம் ஆண்டில் இந்த பாலியல் வன்கொடுமை தொடங்கியதாக கூறப்படுகிறது.

மூன்று பெண் குழந்தைகளில் மூத்தவரான அந்த சிறுமி, 2023-ம் ஆண்டு நியூ ராஜேந்திர நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறவினர் வீட்டில் தனது 38 வயது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார். தாக்குதல் குறித்து அச்சிறுமி வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக அச்சிறுமியின் தந்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்ததாகவும், அதன் விளைவாக அச்சிறுமி கர்ப்பமானதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அச்சிறுமி தன் தந்தையின் சகோதரியான அத்தையிடம் தனது கர்ப்பம் குறித்துத் தெரிவித்தபோது, ​​அந்த அத்தை தந்தையிடம் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அச்சிறுமியின் தந்தை அவரை தாக்கி, அத்தையின் உதவியுடன் கருக்கலைப்பு மாத்திரைகளைப் பெற்று, அவற்றை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தனது மகளை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டில் அச்சிறுமி மீண்டும் கர்ப்பமானதைத் தொடர்ந்து, அவர் அச்சிறுமியை செவிலியர் வர்ஷா மண்டலின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . அதன்பிறகு மண்டல், தனக்கு அறிமுகமானவரும் செவிலியருமான கீதா ராயின் வீட்டிற்கு அச்சிறுமியை அனுப்பியுள்ளார். அந்த சிறுமி அங்கு சுமார் இரண்டு மாதங்கள் தங்கியிருந்துள்ளார். மேலும், அச்சிறுமியை வயது வந்தவராகவும், திருமணமானவராகவும் காட்டுவதற்கு ராய் ஏற்பாடு செய்ததாகவும், மேலும் ராய்ப்பூரின் டங்கானியா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்ப்பதற்காக, போலி ஆதார் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நாட்கள் கடந்தால் கருக்கலைப்பு செய்யமுடியாமல் போயுள்ளது.

பின்னர் அந்தப் பதின்மவயது சிறுமி அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பிரசவத்திற்குப் பிறகு, பிறந்த குழந்தையை மருத்துவர், அப்பெண்ணின் தந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் அனைவரும் சேர்ந்து வேறொருவருக்கு விற்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, அச்சிறுமியின் தந்தை அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, சுமார் 15 நாட்கள் அப்பெண் ராயின் வீட்டில் தங்கியிருந்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளனர். பின்னர் ஒருநாள் அச்சிறுமி சமூக ஊடகங்கள் மூலம் தனது தாயைத் தொடர்புகொண்டு, தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் துன்புறுத்தல் குறித்து அவரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் திங்கள்கிழமை அன்று, அச்சிறுமியின் தாய் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஒரு புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை, போலி ஆவணம் தயாரித்தல், குற்றவியல் மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், கருக்கலைப்பை ஏற்படுத்த அல்லது தடுக்க நோக்கம் கொண்ட செயல்கள் மற்றும் பொது நோக்கம் ஆகியவை தொடர்பானவை உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பல்வேறு பிரிவுகளின் கீழ், நியூ ராஜேந்திர நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் கடுமையான சட்டம் (போக்சோ) மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், அந்த சிறுமியின் தந்தை மற்றும் அத்தை, யோகிதா ராய் என்ற கீதா, தனியார் மருத்துவமனையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் 42 வயது சாஹேப் மண்டல், அவரது மனைவி 34 வயது வர்ஷா மண்டல், பச்சிளம் குழந்தையை வாங்கியதாகக் கூறப்படும் நபர் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்