ravi and sathish  
க்ரைம்

“மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன்” - இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கொடூரம்.. ஆம்பூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

தனது வீட்டிற்கு சென்று வீட்டில் அனுமதியின்றி கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் 56 வயதுடைய ரவி. இவர் மாட்டு வண்டி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மகளான பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான 33 வயதுடைய சதீஷ் என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதுடைய மகள் மற்றும் 4 மாத குழந்தையும் உள்ள நிலையில் சதீஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரீத்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

சதீஷுக்கு ஏற்கனவே திருமணமாக இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து குழந்தைகளுடன் அதே பகுதியில் சதீஷின் தாய் வீட்டில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் பிரீத்தி சதீஷை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் சதீஷ் வெல்டிங் தொழிலுக்காக பெங்களூர் மற்றும் உள்ளூர் பகுதிகளில் அவ்வப்போது வேலை செய்து வந்த நிலையில் மது பழக்கத்திற்கு ஆளாகி அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரீத்தியும் சதீஷை பிரிந்து தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்.

எனவே நிரந்தரமாக சதீஷை பிரிய நினைத்து பிரீத்தி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குடித்துவிட்டு அடிக்கடி மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல நேற்று மது போதையில் இருந்த சதீஷ் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பிரீதியின் தந்தை ரவி சதீஷை தட்டி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் பக்கத்து தெருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வீட்டில் அனுமதியின்றி கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து மாமனார் ரவியை சுட்டுள்ளார். இதில் குண்டு பட்டு ரவி இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் மாமனாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய திமுக கிளை செயலாளர் குமுதா வெங்கடேசனின் மகன் சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் துரிதமாக செயல்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.