telangana murder attempt  
க்ரைம்

“அவளை கொன்னுட்டேன்.. குழந்தைகளையும் கொல்ல போகிறேன்” - கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் வெறிச்செயல்.. ரத்தக் காயத்துடன் மனைவி புகார்!

தனது இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டதாகவும் ...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாவட்டம், ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்தர் ரெட்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண்ணை காதலித்து கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. எனவே கணவன் மனைவி இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹைதராபாதில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்த மகேந்தர் ரெட்டிக்கு வேறு  ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் சமீபத்தில் மகேந்தர் ரெட்டி அவரது அக்கா மஞ்சுளாவுடன் பேசி வந்த நிலையில் அவர் மாதவியை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்து இடையூறு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மகேந்தர் நடத்தையில் சந்தேகமடைந்த மாதவி அவரை கண்காணித்த போது மகேந்தர் பழகி வந்த பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரியவந்து. இதனை தொடர்ந்து மாதவி இது குறித்து தனது கணவரிடம் கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக மாதவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தைகள் உடன் அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை சமாதானம் பேச மகேந்தர் ரெட்டி அழைத்திருக்கிறார். எனவே மாதவி குழந்தைகளை அழைத்து கொண்டு மகேந்தர் ரெட்டி வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு மீண்டும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, வீட்டில் இருந்த பேட்டால் மாதவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மாதவியின் கை கால்களில் முறிவு ஏற்பட்டு, அவர் மயங்கிய நிலையில் இரு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு மகேந்தர் ரெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மேலும் மாதவியின் அக்காவிற்கு போன் செய்து “அவளை கொன்னுட்டேன்.. அடுத்து குழந்தைகளையும் கொல்ல போகிறேன்” என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாதவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாக தாக்கியதாகவும், தனது இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேந்தர் ரெட்டி எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரண்டு குழந்தைகளையும் மீட்டு தாயிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கியதுடன், இரண்டு குழந்தைகளுடன் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.