நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் 40 வயதுடைய செல்வம், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் செல்வம் மணிகண்டனுடன் தினமும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது இவர்களை விலகி விட வந்த மணிகண்டனின் அண்ணன் மகனான 21 வயதுடைய சூர்யா என்பவரை செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினரை இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து சூர்யாவிற்கு செல்வத்திற்கும் இடையே இதை காரணமாக வைத்து அவ்வப்போது வீதியில் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் இடையே நடந்து வந்த வாய் தகராறு முற்றி அடித்து கொள்ளும் அளவிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து விலக்கி அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த சூர்யா “என் அப்பாகிட்ட பிரச்சனை பண்ணும் போது உன்னை போட்டிருக்கணும்” என்றும் தனது தந்தையிடம் எப்படி சண்டையிடலாம் என கேட்டும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வத்தைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் செல்வத்தின் தலையில் ஒரு வெட்டும், தோள்பட்டை பகுதியில் இரண்டு வெட்டுகளும் விழுந்தன. இதில் படுகாயமடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்த திருநெல்வேலி டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதியில் மாலை நேரத்தில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.