க்ரைம்

“தலையில் கொட்டு வைத்து வம்பிழுத்த வாலிபர்” - மாறி மாறி மோதிக்கொண்ட இளைஞர்கள்.. பறிபோன 17 வயது சிறுவனின் உயிர்!

அங்கிருந்த தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு..

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், கொளத்தூர், முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதுடைய வீரமணி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகனான 17 வயதுடைய ஹர்ஷவர்தன் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கொளத்தூரில் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்ஷவர்தன் மற்றும் அவரது நண்பர் கௌதம் இருவரும் இருசக்கர வாகனத்தில் வில்லிவாக்கம் பஜனை கோயில் தெரு வழியாக சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனுஷ் என்பவர் இருசக்கர வாகனத்தை மடக்கி “இது எங்க ஏரியா வண்டியில் வேகமாலாம் வரக்கூடாது” என ஹர்ஷவர்தன் தலையில் கொட்டு வைத்து அனுப்பி உள்ளனர். இதனை மனதில் வைத்துக் கொண்டு கடந்த பத்தாம் தேதி ஹர்ஷவர்தன் தனது நண்பர்களான கௌதம் வெற்றி மற்றும் சிலரை அழைத்துக் கொண்டு அதே இடத்திற்கு சென்றுள்ளார். சரியாக அதே நேரத்தில் தனுஷும் அதே பகுதியில் இருந்துள்ளார்.

பின்னர் தனுஷை பார்த்து ஹர்ஷவர்தன் “அன்றைக்கு ஏன் என்னை அடித்தீர்கள்” என கேட்டபோது தனுஷ் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தால் அப்படித்தான் கொட்டுவோம் எனக் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது.இரு தரப்பிலும் கற்கள் மற்றும் கட்டையால் அடித்துக் கொண்டனர்.

இதில் ஹர்ஷவர்தன் மட்டும் சிக்கிக் கொள்ள மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். தனுஷ் தரப்பினர் தாக்கியதில் ஹர்ஷவர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முதற்கட்டமாக கொளத்தூர் மக்காராம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தருண் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொளத்தூர் ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என இருவரையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹர்ஷவர்தன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை ராஜமங்கலம் போலீசார் கொலை வழக்காக மாற்றி இன்று காலை வில்லிவாக்கம் தாதன்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரிஷிகாந்த் (18) திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மற்றும் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என மூன்று பேரை கைது செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.