க்ரைம்

“நடுரோட்டில் பெண்ணை அடித்த கள்ளக்காதலன்” - இரவே தண்டவாளத்தில் கொல்லப்பட்ட சம்பவம்.. கணவனுக்கும் கத்திக்குத்து விழுந்தது ஏன்?

ரமேஷ் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் ரோகித் சர்மா நள்ளிரவு ரயில்வே ட்ராக் பகுதிக்கு சென்று..

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் 50 வயதுடைய ராஜேஷ்குமார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் 52 வயதுடைய வீரமுத்து, இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். வீரமுத்துவிற்கும் அதே ஊரை சேர்ந்த 42 வயதுடைய லட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

லட்சுமிக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவருவரும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் குமாருக்கும் லட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சந்திக்கும் போதெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று இரவும் லட்சுமியும் ரமேஷ் குமாரும் மாரியம்மன் கோவில் அருகே சந்தித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ் லட்சுமியை அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை வீரமுத்து அறிந்த நிலையில் வீரமுத்துவிற்கும் ரமேஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ரமேஷ் குமார் தனது மைத்துனர் தியாகராஜன் என்பவரின் மகன் ரோகித் சர்மா செல்போனை வாங்கிக் கொண்டு ரயில்வே ட்ராக் வழியாக சென்றதாக கூறப்படுகிறது.

ரமேஷ் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் ரோகித் சர்மா நள்ளிரவு ரயில்வே ட்ராக் பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரமேஷ் குமார் வீட்டின் எதிரே உள்ள ரயில்வே ட்ராக் பகுதியில் இடது பக்கவிலா, தலை, கை ஆகியவற்றில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். மேலும் வீரமுத்துவும் தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் காயத்துடன் மயக்கத்தில் கிடந்துள்ளார்.எனவே இது குறித்து ரோகித் சர்மா திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ரமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் காயத்துடன் இருந்த வீரமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லட்சுமி மற்றும் வீரமுத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.