க்ரைம்

“மாத்திரைகளை வாங்கி சேமித்து வைத்த மனைவி” - வயிறு வலிக்காக கொடுத்த முருங்கை சூப்.. விவசாயியின் மரணத்தில் வெளி வந்த ரகசியம்!

கடனை நான் அடைக்க முடியாது நீ அடைத்துக் கொள் என திட்டி உள்ளார்..

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி என்பவரின் மகன் 43 வயதுடைய குமார். இவர் விவசாய வேலை மற்றும் கோயிலுக்கு நேர்த்தி கடனுக்காக அழகு குத்தும் பக்தர்களுக்கு அழகு குத்தும் வேலையும் பார்த்து வந்துள்ளார். குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய விஜயா என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் 35 வயதுடைய பாலு என்பவருடன் விவசாயி குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

தொழில் ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறி பாலு அவ்வப்போது குமாரின் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால் குமாரின் மனைவி விஜயா உடன் பாலுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த குமார் மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் விவசாய வேலை தொடர்பாக சிறுக சிறுக குமாருக்கு 15 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் சுமை காரணமாக அவ்வப்போது குமார் மனைவி விஜயாவை, அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து “கடனை நான் அடைக்க முடியாது நீ அடைத்துக் கொள்” என திட்டி உள்ளார்.

விஜயாவிற்கு பாலுவின் மீது இருந்த மோகம் கண்களை மறைக்க குமாரை கொலை செய்து விட்டு கள்ளக்காதலுடன் பாலுவுடன் நிம்மதியாக இருக்கலாம் என விஜயாவும் பாலுவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில் விஜயா தினசரி இரண்டு தூக்க மாத்திரைகள் வாங்கி சேமித்துள்ளார். விவசாயி குமாருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்படும் போது முருங்கை தலை சூப் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விஜயாவும் பாலுவும் முடிவு செய்துள்ளனர்.

வழக்கம்போல குமார் நேற்று முன்தினம் வயிற்று வலியால் துடித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட விஜயா சுமார் 20 தூக்க மாத்திரைகளை முருங்கை தலை சூப்பில் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த குமார் இறந்துவிட்டாரா என சற்று நேரம் கழித்து விஜயா சோதித்து பார்த்துள்ளார் ஆனால் குமார் உயிருடன் இருந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த கள்ளக்காதலன் குமாரை அழைத்து வந்த விஜயா கணவன் இன்னும் சாகவில்லை என கூறியுள்ளார் எனவே பாலு குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்

பின்னர் எதுவுமே தெரியாதது போல இருவரும் அங்கிருந்து பூப்பறிப்பதற்காக வயலுக்குச் சென்றுள்ளனர் சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த விஜயா கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி அலறி அடித்து நடித்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்த போது வயிற்று வலிப்பதாக கூறியவர் உயிரிழந்து கிடந்ததாக நாடகம் ஆடியுள்ளார். உறவினர்களும் குமாரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான வேலைகளை செய்துள்ளனர் அப்போது குமாரின் இறப்பில் சந்தேகம் கொண்ட அவரின் உறவினர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறை 100 என்ற எண்ணுக்கு போன் செய்து குமார் இறப்பில் சந்தேகம் உள்ளது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

இதையடுத்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை உதவி ஆய்வாளர் லோகநாதன் கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர புலன் விசாரணை நடத்தி விஜயா மற்றும் பாலு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்காதலுக்காக கணவனை மனைவியே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த நிலையில் இரண்டு மகனும் ஒரு மகளும் இன்று ஆதரவின்றி நிற்பதை பார்த்த உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.