திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தம்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவ-மாணவிகள் காலை இடைவெளியின் போது தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்கு சென்றனர். பின்னர் அந்த மாணவர்கள் பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு திரும்ப வந்து விட்டனர். ஆனால் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனான கௌஷிக் என்பவர் மட்டும் வரவில்லை.
இதை கவனித்த வகுப்பு ஆசிரியை லீலா பாய் மற்றும் ஆசிரியர்கள், சகமாணவர்கள் மூலம் மாயமான மாணவனை தேடினர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த மாணவனை கையில் பிடித்துக் கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதை அடுத்து அந்த மாணவனிடம் சென்று ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது கௌஷிக் “பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது தன்னை இந்த நபர் கூப்பிட்டதாகவும், ஆனால் செல்லாததால் வாயை பொத்தி அழைத்து வந்ததாகவும் கூறினார்." இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து வெள்ளகோவில் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவனை அழைத்து வந்த நபர் மூலனூர் ஒரத்து பாளையத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ராசு என்பதும் இவர் குடுகுடுப்பை மூலம் ஜோசியம் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் அந்த மாணவனை எதற்காக கடத்திச் செல்ல முயன்றார் எதாவது பலி கொடுக்கும் நோக்கமா? அல்லாது கடத்தி பணம் பார்ப்பதுதான் காரணமா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.