மாவட்டம்

“ஐயோ பாவம்.. எப்படி துடிச்சிருப்பாரோ” - மளமளவென பரவிய தீ.. குடிசையோடு சேர்ந்து கருகிய மாற்றுத்திறனாளி!

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு..

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எடச்சத்துர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அழகேசன் இவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரது தாய் மற்றும் தந்தை மகனை கவனித்து வந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் உயிரிழந்த நிலையில் அழகேசன் தனது உறவினர்கள் பாதுகாப்பில் சில நாட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இவர் உறவினர்களை விட்டுவிட்டு தனியாக அவரது சொந்த விவசாய நிலத்தில் கூரை வீடு கட்டிக்கொண்டு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இருசாயி அம்மன் கோவிலில் குறி சொல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். அழகேசன் வீட்டில் கேஸ் இல்லாமல் அவர் விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி அழகேசன் இன்று காலை அவரது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துள்ளார். அப்போது திடீரென கூரை வீட்டில் தீ பற்றி தீ மளமளவென எரிய தொடங்கியது.

அப்போது அவரது நான்கு சக்கர வண்டி அவர் அமர்ந்திருந்த இடத்தில இருந்து தூரத்தில் இருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த மாற்று திறனாளி அழகேசன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வீடு தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாற்றுத்திறனாளியின் வீடு எரிந்தது சமையல் செய்யும் போது தானா அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா என்பதை குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி வேட்டை விட்டு வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.