பொழுதுபோக்கு

தனுஷுடன் காதல் வதந்தி.. செம "பன்ச்" ஒன்று சொல்லி மிருணால் தாக்கூர் உருக்கம் - ஓஹோ.. அப்படி போகுதா கதை!

இந்த வதந்திகளில் துளியும் உண்மையில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...

மாலை முரசு செய்தி குழு

பாலிவுட் நடிகை மிருணால் தாக்கூர் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின. குறிப்பாக, இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டது மற்றும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் பதிவிட்ட கருத்துக்கள் இந்த யூகங்களுக்கு வலு சேர்த்தன.

இந்த நிலையில், தனது புதிய இசை வீடியோவான 'பீகி பீகி' (Bheegi Bheegi) படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற மிருணால், காதல் குறித்துத் தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அதில், "காதல் என்பது ஒரு அழகான உணர்வு, அது இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது. இது உங்கள் உள்ளுக்குள் இருக்கும் காயங்களைக் குணப்படுத்தி, உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள உதவும் ஒரு அற்புதமான விஷயம்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் காதலிக்கும்போது அதிகமாக விட்டுக்கொடுக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "காதல் என்பது பாலினத்தைச் சார்ந்தது அல்ல. காதலில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அதிகமாகக் கொடுப்பவர்களாகவே (Givers) இருப்பார்கள். காதல் வரும்போது, அந்த நபருக்காக நீங்கள் அனைத்தையும் செய்யத் துணிவீர்கள். அங்கு ஒரு முழுமையான அர்ப்பணிப்பு இருக்கும்" என்று விளக்கியுள்ளார். காதலில் கொடுப்பதை விட, அதை ஏற்றுக்கொள்வதும் அங்கீகரிப்பதும் தான் சில நேரங்களில் கடினமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷுடனான திருமண வதந்திகள் குறித்துப் பேசிய மிருணால், தான் தற்போது தனது திரைப் பயணத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாகவும், இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தனுஷ் தனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே என்றும், வதந்திகளைக் கண்டு தான் கலங்கவில்லை (Unshaken) என்றும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிப்ரவரி மாதத்தில் அவரது படங்கள் வெளியாக உள்ளதால், இந்த வதந்திகளில் துளியும் உண்மையில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் விவாகரத்து முடிவுக்குப் பிறகு, தனுஷுடன் இணைத்துப் பேசப்படும் முதல் நடிகை மிருணால் தாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இரு தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது மிருணால் நடிப்பில் 'டோ தீவானே ஷெஹர் மே' (Do Deewane Seher Mein) உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்