அன்றாட உணவு வகைகளில் சற்று விலகி, ஒரு சிறப்பு விருந்துக்குச் சமமான சுவையைக் கொடுக்கக்கூடியது இந்த இணை. நெய் சாதம் என்பது வாசனை மிக்க அரிசியை, நெய்யில் வறுத்து, ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள் சேர்த்துச் சமைக்கும் ஓர் சுவையான உணவு இது. இதன் மென்மையான சுவைக்கு, காரசாரமான மட்டன் குருமா ஒரு சிறந்த காம்போ.
பாஸ்மதி அரிசி/சீரகச் சம்பா: ஒரு குவளை.
நெய்: மூன்று தேக்கரண்டி.
வெங்காயம்: ஒன்று (நீளமாக நறுக்கியது).
ஏலக்காய், கிராம்பு, பட்டை: தலா மூன்று.
பிரிஞ்சி இலை: ஒன்று.
முந்திரிப் பருப்பு: பத்து.
உப்பு: தேவையான அளவு.
அரிசியைக் கழுவி, இருபது நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஒரு குவளை அரிசிக்கு ஒன்றரை குவளை தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி, முந்திரிப் பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும். பிறகு, வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
ஊற வைத்த அரிசியை வடிகட்டிச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மெதுவாக வறுக்கவும். இப்போது, அளந்து வைத்த தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும், மூடி போட்டு, தீயைக் குறைத்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை சமைக்க வேண்டும். சாதம் வெந்ததும், அதன் மேல் வறுத்த முந்திரிப் பருப்பு தூவிப் பரிமாறலாம்.
மட்டன்: அரை கிலோ (சின்ன துண்டுகள்).
சின்ன வெங்காயம்: ஒரு குவளை (நறுக்கியது).
தக்காளி: இரண்டு (நறுக்கியது).
இஞ்சி, பூண்டு விழுது: தலா இரண்டு தேக்கரண்டி.
மசாலா பொருட்கள் (வறுத்து அரைக்க): தேங்காய் (அரை குவளை), கசகசா (ஒரு தேக்கரண்டி), முந்திரி (ஐந்து), சோம்பு (ஒரு தேக்கரண்டி), பட்டை, கிராம்பு, ஏலக்காய் (தலா இரண்டு).
மஞ்சள் தூள்: அரை தேக்கரண்டி.
மிளகாய் தூள்: இரண்டு தேக்கரண்டி.
தனியா தூள்: மூன்று தேக்கரண்டி.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.
உப்பு: தேவையான அளவு.
மட்டனை மஞ்சள் தூள் சேர்த்துச் சுத்தம் செய்யவும். வறுக்க வேண்டிய மசாலா பொருட்களை சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து, மைய அரைத்துத் தனியாக வைக்கவும்.
ஒரு குக்கரில் எண்ணெய்/நெய்யைச் சூடாக்கி, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாகக் குழைய வதக்க வேண்டும்.
இப்போது, சுத்தம் செய்த மட்டனைச் சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, மசாலா மட்டனில் பிடிக்கும் வரை இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பிறகு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி (குருமாவுக்குத் தேவையான அளவு), குக்கரை மூடி, மட்டன் நன்கு வேகும் வரை (சுமார் 5 முதல் 6 விசில்) வேக வைக்க வேண்டும். குருமா கெட்டியாகத் தேவைப்பட்டால், நீர் குறைத்துக் கொள்ளவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகள் தூவி, சுவையான மட்டன் குருமாவை நெய் சாதத்துடன் பரிமாறினால், விருந்து தயார். இந்த இரண்டும் இணைந்து ஒரு புதிய சுவையை அள்ளிக் கொடுக்கும். இதன் சுவை, நிச்சயம் உங்கள் நாக்கில் நீடித்து நிற்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.