டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற சமூக ஊடகத் தளத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, இந்த ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவதற்காக, அமெரிக்காவிலிருந்து 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் நிறுவனரான அபிஜித் திப்கே வெள்ளிக்கிழமையே டெல்லி வந்து சேர்ந்தார். விமான நிலையத்திலேயே அவரைச் சந்தித்த டெல்லி காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தை ஜந்தர் மந்தரில் நடத்த அனுமதி அளித்தனர். ஆரம்பத்தில் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் அனுமதி கோரிச் செல்ல ஆதரவாளர்களை அழைத்திருந்த அபிஜித் திப்கே, காவல்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஆதரவாளர்களை நேரடியாக ஜந்தர் மந்தருக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, அவர் அரசியல் சாசனச் சிற்பி பி.ஆர். அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை கையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லி காவல்துறை அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லியின் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்தில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், கல்வி அமைச்சரின் ராஜினாமாவையும், நீட் விவகாரத்தில் பொறுப்புக்கூறலையும் கோருவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடத்தப்படும் தங்களின் ஆன்லைன் மனுவிற்கு இதுவரை எட்டு லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய "ஒட்டுண்ணிகள்" மற்றும் "கரப்பான் பூச்சிகள்" என்ற கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, கடந்த மே 16 அன்று அபிஜித் திப்கே இந்த 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யைத் தொடங்கினார். இது ஒரு நையாண்டி ரீதியிலான டிஜிட்டல் அமைப்பாகும். தொடங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த அமைப்பு, மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்று இணையத்தில் வைரலானது. தற்போது, அந்தப் புகழை வைத்து நீட் விவகாரத்தில் அவர்கள் எடுத்துள்ள இந்த அதிரடிப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.