பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கும் அல்லது வாடகைக்குக் குடிபெயரும் இளைஞர்கள் மற்றும் இளம் தம்பதிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஸ்ரவன் வெங்கட்ராமன் என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் பகிர்ந்துள்ள கருத்து, இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெரிய கேடட் கம்யூனிட்டிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களில் (RWA) பெரும்பாலும் வயதானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், அவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட விதிகளைப் போட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்தப் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் பேச்சுலர்களுக்குச் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ 25-க்கும் குறைவான குடியிருப்புகள் கொண்ட சிறிய கட்டிடங்களில் (G+3 அல்லது G+4) வாழ்வதே நிம்மதி என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். பெரிய சொசைட்டிகளில் வயதானவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இளைஞர்கள் எப்படி வாழ வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது கருத்துகளைத் திணிப்பதாக ஸ்ரவன் கூறுகிறார். யாராவது இவர்களுடைய விதிகளை எதிர்த்துக் கேள்வி கேட்டால், அதைத் தங்களுக்குப் பிடிக்காத ஒன்றாகக் கருதி அந்தப் பிரதிநிதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தனது வீட்டில் திருட்டு நடந்தபோது, சிசிடிவி கேமரா காட்சிகளைக் கேட்டதற்கு, கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதைப் பாதுகாப்பற்ற சூழல் என்று கருதி, மற்றவர்களையும் தங்கள் பாதுகாப்பிற்காகத் தனிப்பட்ட கேமராக்களைப் பொருத்திக்கொள்ளச் சொன்னதற்கு, சங்க நிர்வாகிகள் அவரை வரவழைத்துத் திட்டியுள்ளனர். சமூகத்தின் பெயரைத் தான் கெடுப்பதாகச் சொல்லி, திருட்டைப் பற்றிப் பேசாமல், அவர் சமூகத்தின் நற்பெயரைக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரச்சினையைத் தீர்க்கப் பார்த்தால், தன்னைப் பார்த்துக் கத்திய அந்த நிர்வாகிகள், சங்கம் எல்லாப் பொருட்களுக்கும் பொறுப்பாக முடியாது என்று கிண்டல் செய்துள்ளனர். இதைக் கண்டு நொந்துபோன ஸ்ரவன், அந்த வாட்ஸ்அப் குரூப்பை விட்டு வெளியேறியுள்ளார். தங்களுக்குப் பிடித்தமான விதிகளை உருவாக்கி, மற்றவர்கள் அதை அடிபணிந்து நடக்க வேண்டும் என்று இந்த வயதானவர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வாடகைக்கு இருப்பவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக இவர்கள் நடத்துவதாகவும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்தைப் பலரும் வழிமொழிந்துள்ளனர். இதேபோல் கேடட் கம்யூனிட்டிகளில் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். விருந்தினர்களைக் கட்டுப்படுத்துவது, பேச்சுலர்களைக் கேவலமாகப் பார்ப்பது, தார்மீக போலீஸ் போலச் செயல்படுவது எனப் பல புகார்கள் எழுகின்றன. அதிக மெயின்டனன்ஸ் கட்டணம் கட்டினாலும், தங்களை அந்நியர்களைப் போல நடத்துவதாகப் பலரும் புலம்புகின்றனர். ஆனால், அதே சமயம் அதிக மக்கள் வாழும் குடியிருப்புகளில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கச் சில கட்டுப்பாடுகள் அவசியம் என்று சிலர் இந்தச் சங்கங்களுக்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.