காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அவர்களது தனிப்பட்ட அந்தரங்கத் தருணங்களைப் புகைப்படம் எடுத்து, அதைக் காட்டியே மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தும் கொடூரச் சம்பவங்கள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய ஒரு வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், "உண்மையான காதலன் ஒருபோதும் தன் காதலியின் அந்தரங்கப் படங்களை எடுத்து மிரட்ட மாட்டான்" என்று மிகவும் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. நீதிபதி வி. ஸ்ரீஷானந்தா அவர்கள் வழங்கிய இந்த அதிரடித் தீர்ப்பு, காதலிப்பதாகக் கூறி அத்துமீறும் நபர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணி குறித்துப் பார்க்கையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்று, அவரோடு நெருக்கமாக இருந்த சமயத்தில் அவருக்குத் தெரியாமல் அந்தரங்கப் புகைப் படங்களை எடுத்துள்ளார். அதன் பிறகு, அந்தப் புகைப் படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் தனது பாலியல் இச்சைகளுக்குப் பணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மிரட்டல் எல்லை மீறியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணையில் அந்த நபர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்தச் சூழலில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த நபரின் செயலை மிகக் கடுமையாகச் சாடினார். ஒருவேளை அவர்கள் இருவருக்கும் இடையே இருந்தது பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவாகவே இருந்தாலும், அந்த அந்தரங்கத் தருணங்களைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதைப் பெண்ணை மிரட்டுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார். இது ஒரு ஆரோக்கியமான காதல் உறவின் அடையாளம் அல்ல, மாறாக இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
நீதிமன்றம் தனது உத்தரவில், "உண்மையான காதலில் மரியாதையும் பாதுகாப்பும் தான் இருக்கும். ஆனால் இங்கே அந்தப் பெண் மிரட்டப்பட்டுள்ளார். விசாரணையில் அந்த நபர் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் தலைமறைவாக உள்ளார். இத்தகைய நபர்களுக்கு ஜாமீன் வழங்குவது சமூகத்திற்குத் தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும்" என்று தெரிவித்தது. மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சிதைக்க முயற்சிக்கும் இத்தகைய நபர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. புகைப் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டி ஒரு பெண்ணை உறவுக்குக் கட்டாயப்படுத்துவது சட்டத்தின் பார்வையில் மிகக் கடுமையான குற்றமாகும்.
இந்தத் தீர்ப்பு, சமூக வலைதளங்கள் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் காதல் வயப்படும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியப் பாடமாக அமைந்துள்ளது. அந்தரங்கத் தருணங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதும், பின்னர் அதைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதும் அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த 'உண்மையான காதலன்' குறித்த விளக்கம் சமூகத்தில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தாரிடம் விடயத்தைச் சொல்லி, சட்ட ரீதியான உதவியைப் பெற்றது மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. இறுதியில், அந்த நபரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.