NEET re-exam 2026 NEET re-exam 2026
இந்தியா

நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு! "ஜூன் 21ல் மறுதேர்வு" - வினாத்தாள் கசிவினால் அதிரடி முடிவு

நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

Vinvizhi Leninton

கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறியதையடுத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

நீட் 2026 தேர்வு கடந்த மே 3 தேதி நடந்தது. இந்தியா முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மறு தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வுக்கு பின்னர், முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் தேசிய தேர்வு முகமைக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் சட்ட அமலாக்கத் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தேர்வை ரத்து செய்வதென முடிவு எடுக்கப்பட்டது. மறுதேர்வு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மாணவர்கள் புதியதாக பதிவு செய்ய தேவையில்லை என்றும், கூடுதல் தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ராஜஸ்தான் காவல்துறை சிறப்பு நடவடிக்கை குழு (SOG) இந்த வழக்கில் 15 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில், முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மணீஷ் என்பவர் அடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பல மாணவர்கள், குறுகிய காலத்திற்குள் மீண்டும் தயாராக வேண்டிய மன அழுத்தம், நிச்சயமற்ற தன்மை மற்றும் நெருக்கடி குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். தேர்வுப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த பெரும் விவாதத்திற்குப் பிறகு, இந்த மறுதேர்வு இனி நாடு முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று கல்வி வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வு தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் மறுதேர்வில் கடுமையான கண்காணிப்பும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு புதிய சவாலையும், மறுபுறம் மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பையும் அளிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த முறை எந்த சர்ச்சையும் இன்றி தேர்வு நடைபெறும் நேற்று தேர்வர்களாலும், பெற்றோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.