கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர், நடன கலைஞர், சமூக சேவகராக ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய நிலையில், இன்று காலை வெளியிடுவதாக கூறினார். மேலும், அரசியலுக்கு வரப்போகிறாரா? திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்டியிடுவாரா? போன்ற பல கேள்விகள் மக்களிடையே இருந்தது. அது அரசியல் வட்டாரங்களிலிலும் பரவி வந்தது. தற்போது அது குறித்து தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதற்கு முன்பு, தெளிவான விளக்கவுரையை அளிக்க ஒரு வீடியோ வெளியிடுவதாக கூறி ஒரு பதிவினை வெளியிட்டார். அதில், எதையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை நேர்மையாகச் செய்யுங்கள். எனக்கு உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவை. நான் அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. பணம் சம்பாதிக்கும் எண்ணமோ அல்லது தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்கு இருந்ததில்லை. நான் நம்பும், எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், நான் ஒரு தனிநபராகச் செய்து வருவதை விடப் பெரிய அளவில் சமூகத்திற்குச் சேவை செய்ய, அவர்களுக்குத் துணையாக நின்று அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பது மட்டுமே என் ஒரே எண்ணமாக இருந்தது. இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிரும் இந்தக் காணொளியில், அரசியல் குறித்த எனது புரிதல், அது என் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த என் தாயின் கண்ணோட்டம், மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி என் இதயத்திலிருந்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன். இந்தக் காணொளியை இறுதிவரை பார்த்து, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இந்த முக்கியமான அடியை நான் எடுத்து வைக்கும்போது, உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை.
இதனையடுத்து அவர் வெளிட்ட வீடியோ ஒன்றில் விளக்கமளித்திருந்தார். அதில், கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே! என்ற வாசகத்தோடு ஆரம்பித்தார். மேலும் ஒரு குட்டி கதையையும் கூறினார். அதில் பலனை எதிர்பார்க்கலாம் வேலை செய்த வேலையாளுக்கு நல்லபலனை முதலாளி தருவது போல் அமைந்திருந்தது அந்த கதை. மேலும், பேசிய அவர் முதலில் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவதாக இருந்த போது தானும் அரசியலுக்கு வரலாம் என்று இருந்ததாக கூறினார். அரசியலுக்கு வருவதன் மூலம் ஆதரவற்றோர் இல்லத்தை மேலும் பெரிதுபடுத்தி, பலருக்கும் உதவி செய்யலாம் என்று எண்ணியதாக கூறினார். ஆனால், தான் அரசியலுக்கு வருவது தனது தாய்க்கு பிடிக்கவில்லை என்று கூறினார். அந்த சமயத்தில் கொரோனா வந்ததாலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அவரும் அரசியலுக்கு வரவில்லை என்று முடிவானது. பின்பு அரசியலுக்கு ரஜினி வருவது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தது குறித்தும் பேசினார். சீமான் ரஜினி காந்தை விமர்சித்தபோது தான் சமூகவலைத்தளத்தில் அதற்கு பதிலளித்த அந்த நாள்தான் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தது என்று அவர் கூறினார்.
ஒரு கட்டத்தில், நடிகர் ரஜினி காந்த் தனக்கு எவ்வளவு நெருக்கமோ அதேபோல் நடிகர் விஜயும் தனக்கு நெருக்கம் என்றும் பேசினார். விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அவரிடம் கூறியபோது மீண்டும் மகிழ்ந்ததாகவும் மீண்டும், தனது தாய் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்றும் கூறினார். இது குறித்து விஜயிடம் பேசியபோது வயதானவர்கள் புரிந்துகொள்ள நாட்கள் எடுக்கும் என்று கூறினார். லஞ்சம், மதம், சாதி இவற்றாலானது என்று லாரன்ஸின் தாய் நினைத்து கொண்டிருக்கும்போது தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றார். இதனால் விஜய் அனைத்தையும் மாற்றியுள்ளார் என்று அவரது தாயும் அவரை அரசியலுக்கு செல்ல அனுமதி கொடுத்ததாக கூறினார். தற்போது மக்களாகிய நீங்கள் கூறுங்கள் நான் அரசியலுக்கு வரவா? வேண்டாமா? என்று தனது ரசிகர்கள் மற்றும் மக்களிடம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
மேலும், தான் செய்த கடமைக்கு பலனை எதிர்பார்க்காமல் செய்ததற்கு எடுத்துக்காட்டாக அவரது ஆசிரமத்தில் வளர்ந்த குழந்தைகளை காண்பித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.