தமிழ்நாடு

“என் தம்பி தலைய கேட்டியாமே! இப்போ எடு பாப்போம்!!!”- சவால் விட்ட பிரபல ரவுடி!!!

பிரபல ரவுடியின் தம்பி திருமணத்தில் மணமகன் தலையை வெட்டி எடுத்து பழிக்கு பழி கொலை செய்யவுள்ளதாக எதிர் ரவுடிகள் சவால் விட்டதை தொடர்ந்து பலத்த போலீசார் பாதுகாப்புடன் ரவுடியின் தம்பி திருமணம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம் அடுத்த நடுவீரபட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடி லெனின் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது தம்பி நரேஷ்பாபு என்ற ஆலன் ஜான்சன். இவரும் ரவுடியாகத்தான் வலம் வந்துள்ளார். இவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மாமல்லபுரம், கிருஷ்ணன்காரணை - பட்டிப்புலத்தில் உள்ள லீலாவதி திருமண மண்டபத்தில் ரவுடி நரேஷ்பாபுக்கும் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த காலின் ஹேனா செரின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

நடுவீரப்பட்டு சோமங்களம் சுற்றுவட்டார பகுதியில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த லெனின் எதிரியான மேத்யூ, சச்சின் இவர்களும் ரவுடிகள் தற்போது தலைமறைவாக உள்ளனர். கடந்த ஆண்டு இவர்களுக்கும் லெனின் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் லெனின் தரப்பினர் மேத்யூவின் நண்பர் அபிஷேக் என்பவரின் தலையை வெட்டி எடுத்து வீசியுள்ளனர்.

இதற்கு பழி தீர்க்க ரவுடி லெனின் தம்பி நரேஷ்பாபு தலையை திருமணம் அன்றே வெட்டி எடுத்து அபிஷேக் தலை கிடந்த அதே இடத்தில் வைப்போம் என ரவுடி மேத்யூ கூட்டாளிகள் சபதமிட்டுள்ளனர்.

இது குறித்து தாம்பரம் சரக “ஸ்பெஷல் டீம்” போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் மேத்யூ கூட்டாளிகள் அருவா, கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாறு வேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்றே பதுங்கி விட்டதாக போலீசாருக்கு கூடுதல் தகவலும் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் திருமணம் நடக்கும் இடத்தில் இருதரப்பு ரவுடிகளால் சண்டை ஏற்பட்டால், சட்டம் ஒழுங்கு சீர்கெடும். மேலும், திருமணம் நடைபெறவுள்ள இடத்தில் கொலை சம்பவம் நடந்தால் ஆது பெரிய கலவரமாக மற்றவர்களுக்கு மாறும் என்பனைக் கருத்தில் கொண்டு, பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் ரவுடிகளை முழங்காலுக்கு கீழ் சுட்டுப்பிடிக்கும் உத்தரவுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் கை துப்பாக்கியுடன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என பலரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து போலீசார் இசிஆர் வழியில் வரும் அனைத்து வாகனங்களையும் தடுப்புகளை அமைத்து நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுபோல் ரவுடி திருமணத்தையும் பாதுகாப்பாக நடத்த தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நிறைவுற்று நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரால் தேடப்பட்டு வரும் மிகப்பெரிய ரவுடியின் தம்பி திருமணத்தை போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்து நடத்தி வைத்தது ரவுடிகளுக்கு உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்