Sengottaiyan Open Talk about tvk in tamil Sengottaiyan Open Talk about tvk in tamil
தமிழ்நாடு

“தவெக என்ன அரவணைச்சு போறாங்க..நான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துட்டேன்..” -செங்கோட்டையன் ஓபன் டாக்!!

தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர்

Saleth stephi graph

தமிழக  அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கணிக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள். 

இது இப்படி இருக்க, ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

சின்ன ரீவைண்ட்!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமானது என்பதை தமிழ்நாடு நன்கு அறிந்த ஒன்று. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். 

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான்,  முத்துராமலிங்க தேவரின்  நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். இதுதான் சமயம் என நினைத்த எடப்பாடி, ‘கட்சிக்கு எதிரான செயலில் ஈடுபட்டார் செங்கோட்டையன் எனக்கூறி அவரை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்தும் நீக்கினார். இது எடப்பாடிக்கு பெரும் பின்னடைவு என்றே கருதப்பட்டது. 

இந்த சலசலப்புக்கு இடையில் தான், “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமெனகேட்டிருந்தோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்” என பரபரப்பான  கருத்தை கூறியிருந்தார். 

ஆனால் அதற்கு அதிமுக தலைமை எவ்வித பதில்வினையும ஆற்றாமலே இருந்து வந்தது. நாங்கள் அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம் ஆனால், அவர்களின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என பேசிய பாஜக -வா இப்படி செய்தது என கேள்வி எழுப்பப்பட்டாலும், அவர்கள் தரப்பும் செங்கோட்டையனின் பேச்சுக்கு பேச்சுக்குக்கூட மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் ஆர்வலர் பலர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன். ஆனால் அவர் சட்டைப்பையில் ஜெயலலிதா -வின் புகைப்படம் தான் இருந்தது. அந்த அளவுக்கு அதிமுக தலைமைக்கு பலகாலமாக விசுவாசமாக இருந்தவர் செங்கோட்டையன்.

ஆனால் தற்போது அவர் தவெக -வில் இணைந்திருப்பது அரசியல் சூழலையே மாற்றியுள்ளது.  மேலும் செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் வரவு குறித்து பேசியுள்ள விஜய் “20 வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பதவியை வகித்தவர். கட்சியின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தவர். 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் பணியாற்றியவர் அண்ணன்  செங்கோட்டையன் அவரது அரசியல் அனுபவமும், களப்பயணம் நமது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக அமையும் இனி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் நடக்கும் வெற்றி நிச்சயம்” எனப்பேசியிருந்தார்.

விஜய் எண்ணம்!!

விஜயின் பிரதான எண்ணம் அதிமுக -விற்கு மாற்றாக மாறி அந்த வாக்குகளை பெறுவதுதான். அதனால் தான் அவர் தொடர்ந்து பொதுவெளியில் எம்.ஜி.ஆர் -ஐ பற்றி பேசி வருகிறார். மேலும், தனது கட்சியின் முதல் கூட்டணியாக அதிமுக -விலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையனை சேர்த்துள்ளார். ஆனால் ஒருவிஷயத்தை கூர்ந்து கவனித்தால் அவர் ஜெயலலிதாவைப் பற்றி அதிகம் பேசியிருக்க மாட்டார். காரணம் ஜெயலலிதா சமகால அரசியல்வாதி, அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்தார்.  மேலும் அவர் சொத்து குவிப்பில் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி இதையெல்லாம் விஜய் நிச்சயம் யோசிப்பார். ஆனால் உண்மையில் அவர் எல்லோரின் வாக்குகளையும் உடைக்கிறார் என்பதுதான் உண்மை” என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் தனது அனுபவங்கள் குறித்து பேசிய அவர்,
என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவிலும்  தற்போது இருக்கிறேன். தவெகவில் கடுமையாக உழைக்க முடிவு செய்துவிட்டேன். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரும் 18 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வரவிருக்கிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். இந்நிகழ்ச்சி வரலாறு படைக்கும் நிகழ்வாக இருக்கும்.

தமிழக வெற்றி கழகத்தில் பலர் இணைய வாய்ப்புள்ளது என்றுதான் சொன்னேன் தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, நிலுவையில் இருக்கிறது. புதிதாக வந்தவர்கள் என்னை நீக்க முடியாது.

நான் விருப்பப்பட்டுதான் இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.