தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ரெடிமேட் பின்னலாடைத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், செல்வ சுஹாசினி (16) என்ற மகளும் உள்ளனர். செல்வசுஹாசினி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.
செல்வகுமாரின் குடும்பத்தினர் தங்களது வீட்டில் ஒரு நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தனர். அந்த நாயுடன் மாணவி செல்வ சுஹாசினி எப்போதும் மிகவும் பாசமாக விளையாடுவது வழக்கம். அப்படித்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் அந்த நாயுடன் செல்வ சுஹாசினி விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ளவர்களும் வீட்டு செல்ல பிராணி தான் என்று எப்போதும் போல இருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாயின் நகம் பட்டு மாணவிக்கு கீறல் மற்றும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாய் கடித்த அல்லது கீறல் ஏற்பட்ட உடனேயே டாக்டரிடம் போகாமல் இருந்துள்ளார். வெறும் நகக்கீறல் தானே என்று பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறாமலும் இருந்துள்ளார். மாணவியின் பெற்றோரும் இது குறித்து தடுப்பூசி போடவோ அல்லது மருத்துவரை அணுகவோ இல்லை. முக்கியமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமலும் மாணவி இருந்துள்ளார். அவர்கள் நாக கீறல் என நினைத்து அலட்சியமாக இருந்துள்ளனர், ஆனால் நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி செல்வ சுஹாசினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சுஹாசினிக்கு நாய் கடித்ததை உறுதி செய்து, அதனால் உடல் மூலம் விஷம் (Rabies) பரவி இருப்பதாகவும் தெரிவித்தனர். இது வெகு நாட்கள் கவனிக்க படாததால் தீவிர சிகிச்சை தேவை என்றும், அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, செல்வசுஹாசினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளன சுஹாசினியின் பெற்றோர் மாணவியின் உடலை கூட வாங்க முன்வராமல் இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உடலை உறவினர்கள் வாங்காத நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தத்தனேரி மயானத்தில் மாணவியின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறிய அலட்சியம் ஒரு மாணவியின் உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், அவரது இறுதி பயணத்தையும் இவ்வளவு துயரமாக மாற்றியது தூத்துக்குடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் இருந்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர், அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் மீளவில்லை என கூறப்படுகிறது. மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இது போல் அலட்சிய போக்கை தவிர்க்குமாறு பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியாக இருந்தாலும் நாய் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சிறு காயம் என அலட்சியமாக இல்லாமல் விரைவாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.