நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் இடது சாரிகள் போட்டியிடுவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இடதுசாரிகளை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்த நிலையில் பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து, திமுகவுடனான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆதரவினை அளித்ததோடு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, தவெக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகிய MLA-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தனர். இதனால் தற்போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சென்னை பாலன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார். மேலும், இதில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த கேள்விக்கு வரும் செப்டம்பர் 15ம் தேதி அறிவிக்கப்படும் என்று வீரபாண்டியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தவக-விற்கு அளிக்கப்படும் ஆதரவு தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்யப்படும் என்றும் வீரபாண்டியன் தெரிவித்திருந்தார்.
தற்போது, இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் என்ற இந்த அறிவிப்பு, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தலுக்காக தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகா, புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ச. கார்த்திக் குமாரி ஆகியோரும் போட்டியிடவுள்ளனர். நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக. நாதக, கம்யூனிஸ்ட்கள் என்று 5 முனை போட்டியாக இருக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.