தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்ட அவர், துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார். நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த விஜய்க்கு, இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், தவெக நிர்வாகி துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி அவரை வரவேற்றனர்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதே முக்கிய நோக்கம்
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் விஜய்
இந்நிலையில், விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக இன்று இந்திய நேரப்படிமணியளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். போட்டி இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி, இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது.
சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டில் விஜய்
கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்றார். அங்கு அவரைக் கண்ட இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பலரும் விஜய்யுடன் செல்பி எடுத்துக் கொண்டதுடன், ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர்.
அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த விஜய்
இதனைத் தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டில் நடிகர் அஜித்குமாரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். அப்போது குழந்தைபோல உற்சாகமடைந்த ஓடி சென்று அஜித்தை ஆரத்தழுவிய விஜய், கார் பந்தயத்தில் வெற்றி பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து விஜய்யும் அஜித்குமாரும் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இருவரும் சந்தித்துக்கொண்ட காட்சிகளை அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.சினிமாவில் ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித், லண்டனில் ஒரே இடத்தில் சந்தித்து நட்புடன் உரையாடிய தருணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.