கடத்தி சென்று காட்டுக்குள் சீரழிக்கபட்ட 16 வயது சிறுமி! அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டல்.. சிறுவன் உட்பட 5 பேருக்கு வலைவீச்சு!

அதிகாலை 5 மணியளவில் தான் எழுந்தபோது தனது மகள் வீட்டில் இல்லாததை கண்டு
pocso
Published on
Updated on
1 min read

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 6-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் தான் எழுந்தபோது தனது மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், சில மணி நேரங்களுக்கு பிறகு இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் சிறுமியை வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது மகளிடம் என்ன நடந்தது என்று தந்தை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் வீட்டிற்கு அருகில் ஒரு காலத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த ஷௌகீன் என்ற நபர், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றிருந்ததாகவும், அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும், ஷௌகீனைத் தவிர மேலும் நான்கு பேர் தன்னை முன்பும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஜூன் 5-ஆம் தேதி தன்னை வலுக்கட்டாயமாக ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களின் அடிப்படையில் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் தொடர்புடைய குற்றப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரில் ஒருவருக்கு 18 வயது நிறைவடையவில்லை என்றும், அவர் சிறார் எனவும் காவல்துறை கூறியுள்ளது. குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"இந்த வழக்கை மிகவும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறுமி மீதான இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com