காதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி!!!

பெங்களூருவில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, காதலனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலியை காவல் துறையினர் கைது செய்தனர்.
காதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி!!!
Published on
Updated on
1 min read

கர்நாடகா: பெங்களூரிலுள்ள நியூ மைக்கோ லே-அவுட் பகுதியில் தனது காதலனை ஆண் நண்பர்கள் உதவியுடன் கொலை செய்த காதலி உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் விகாஷ், உக்ரைனில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், இவர் தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார்.

இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமானவர் தான், பிரதீபா. இவர், HSR layout என்ற நிறுவனத்தில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்கத்தொடங்கினர். இவர்களது காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், பிரதீபா மற்றும் அவரது தாயாரின் அந்தரங்க வீடியோக்களை விகாஷ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீபாவும் அவரது குடும்பத்தாரும் விகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தனது காதலனால் ஏமாற்றப்பட்டது குறித்து பிரதீபா தனது சக நண்பர்களான சுஷில், கௌதம், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்தார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த நண்பர்கள், இரண்டு நாள்களுக்கு முன்னர், விகாஷிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி மைக்கோ லே-அவுட் பகுதிக்கு அழைத்தனர்.

பின்னர், அங்கு வந்த விகாஷை மூவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த விகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த விகாஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விகாஷை தாக்கிய சுஷில், கௌதம் ஆகியோரை கைது செய்த நிலையில், இதற்கு உடந்தையாக இருந்த பிரதீபாவையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள சூர்யாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com