செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 37 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தாகமாக இருப்பதாகவும் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய பெண், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அந்த நபர், வீட்டில் வேறு யாரும் இல்லாததை உறுதி செய்ததாகவும், பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த பெண் அணிந்திருந்த ஆடையை கிழித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடியாக உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் இருந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஸ்ரீனிவாசன் என்பதும், ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற பெண் அவர் மீது புகாரளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ரீனிவாசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் அவரை சிறையில் அடைக்கப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.