இச்சமூகத்தில் குடும்பம் , வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர்.
அதற்கு சமீபத்திய உதாரணம்தான் கோயமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவியின் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம். இந்த விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், தனிப்படை போலீசார், குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளனர்.
நவம்பர் 2 அன்று இரவு 11 மணி அளவில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் வினித் என்ற நபர் தனது தோழியுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்கள் தனிமையில் இருப்பதை பார்த்து, இளைஞரை தாக்கி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த வினித் மயக்கமடைந்துள்ளார். மயக்கத்திலிருந்து எழுந்தபோது தன் அருகில் மாணவி இல்லாததால், பதற்றமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். கல்லூரி மாணவியை தூக்கி சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச்சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதில் சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர்கள் கீழே விழவே அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி (20), சதீஷ் (எ)கருப்பசாமி(30), கார்த்திக் (எ) காளீஸ்வரன்(21) என்பது தெரியவந்தது. பின்னர் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. அதில் கருப்பசாமி,காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறை தெரிவிப்பது என்ன!?
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை சுட்டுப்பிடித்தது குறித்து விளக்கம் அளிக்க காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் குற்ற விவகாரம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார், "இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குணா (எ) தவசி (20), சதீஷ் (எ)கருப்பசாமி(30), கார்த்திக் (எ) காளீஸ்வரன்(21) ஆகியோரில் சதீஷ் -ம் கார்த்திக்கும் சகோதரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோயமுத்தூர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த குணா இவர்களுக்கு ஒரு மாத காலமாகத்தான் பழக்கமாகியுள்ளார், மேலும் இவர்கள் மேல் கொலை வழக்கும், பல திருட்டு வழக்கும் நிலுவையில் இருந்து வந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த அன்று கூட கோவில் பாளையத்தில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு போய் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே மது அருந்திவிட்டு, பின்னர் சில மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு விமான நிலையம் பின்புறம் சென்றுள்ளனர்.
அங்கே இவர்கள் இருவரையும் பார்த்த பின்னர் கல்லால் காரின் கண்ணாடியை உடைத்து, அரிவாளால் உடனிருந்த நண்பரை தாக்கி, பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மோதிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏன் பெண்ணை கண்டுபிடிப்பதில் தாமதம்!
தாக்கப்பட்ட இளைஞர் இரவு 11.45 அளவில் காவல் நிலையத்துக்கு புகார் அளித்துள்ளார், ஆனால் பெண் மீட்கப்பட்டது, விடியற்காலை 4 மணிக்குத்தான்.
4 மணி நேரம் ஏன் தாமதம் என பல கேள்விகள் எழுப்பப்பட்டது? ஆனால் அப்போது விளக்கம் அளித்த ஆணையர், மிக இருட்டான பகுதியாக இருந்தது. ஒரு சுவர் இருந்தது. அந்த சுவருக்கு பின்னால்தான் சம்பவம் நடந்துள்ளது.மேலும், மனைவியே வெளியே வந்ததால்தான் கண்டுபிடிக்க முடிந்தது” என சொல்லியிருந்தார்.
தற்போது இந்த வன்கொடுமை சம்பவத்தில் தற்போது பதறவைக்கும் பல பல தகவல்கள் வெளியாகியுள்ளன. “சம்பவம் நடந்த அன்று, உடன் இருந்த வாலிபரை தாக்கிய பின்னர், கத்தியை காட்டி மிரட்டி 3 பேரும் மாணவியை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து 500 மீட்டர் தொலைவிற்கு நடத்தியே கூட்டி வந்துள்ளனர். அங்கே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மதில் சுவர் அருகே அழைத்து வந்த அவர்கள் அங்கு 5 அடி உயரத்தில் இருந்த சவரை ஏறி குதித்துள்ளனர். மாணவியையும் சுவரை தாண்டி வரச்செய்துள்ளனர்.
பின்னர் அந்த கல்லூரி வளாகத்தில் கழிவு நீர் தொட்டி அருகே இருந்த மோட்டார் அறையில் கத்தி முனையில் 3 பேரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். வெளியே போலீசார் சைரன் சத்தத்தை கேட்டும், போலீசார் உள்ளே வர மாட்டார்கள் என தெரிந்து அங்கேயே இருந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு 3 பேரும் மீண்டும் கல்லூரி மதில் சுவரை ஏறி குதித்து தப்பிச்சென்றுள்ளனர். அதன் பின்னரே மாணவிமெல்ல எழுந்து மதில் சுவரை ஏறி குதித்து அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் உதவிகேட்டு சென்றுள்ளார் அதன்பின்னர் தான் மீட்கப்பட்டார், என்ற புதிய தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.